Saturday 3 July 2010

வீட்டில் யாரும் இல்லை வாவென்றழைத்தாள்


அர்த்தம்

வீட்டில் யாருமில்லை

வாவென்றழைத்தாள்

சென்றேன் யாருமில்லை


முடிவு

நானும் என் தாத்தாவைப் போலவே

தூங்கிக் கொண்டிருக்கும் போது

அமைதியாக ஒரு நாள்

சாக விரும்புகிறேன்

அவர் சாகும் போது

அவர் ஓட்டிய பேரூந்தில்

இருந்த பயணிகளைப்போல்

கத்திக் கதறாமல்


பதச்சொல்

கணனிப்பித்தன் எப்படிச் செத்தான்

கடலலை அடித்துச் செல்லும் போது

உதவி உதவி என்று கத்தாமல்

F1.....F1.....என்று கத்தினான்

யாருக்கும் விளங்கவில்லை

எவரும் உதவவில்லை

Friday 2 July 2010

ஹரி பொட்டர் நடிகையைக் கொல்ல குடும்பத்தினர் முயற்ச்சி!!


நாலு ஹரி பொட்டர் திரைப்படங்களில் பத்மா பாட்டீல் பாத்திரத்தில்நடித்த 22 வயதான அfஷான் என்பவரை அவரது தந்தையும் சகோதரரும் கொல்ல முயன்றதாக வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது.

54 வயதான அப்துல் அஷாத்தும் அவரது மகனான் 24வயது அஷ்ரப்பும் தங்களது வீட்டில் வைத்து நடிகை அfஷான் மீது கடுமையாக தாக்கியதற்காக இந்த வழக்கு மன்செஸ்டர் நீதிமன்றத்திற்கு வந்துள்ளது.

அfஷான் இப்போது பாடசாலையில் கற்று வருகின்றார். இவர்மீது புரியப்பட்ட குற்றங்கள் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவில்லை.

போர்க்குற்றம்: ஐநா ஆலோசனை சபை ஒரு மோசடியா?


இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் பொதுச் செயலர் பான் கீ மூன் தனக்கு ஆலோசனை வழங்க ஒரு நிபுணர் குழுவை பல இழுத்தடிப்பின் பின்னர் அமைத்துள்ளார். இதனால் இலங்கை அரசும் சிங்களப் பேரினவாதிகளும் கொதித்து எழுகிறார்கள் அல்லது இந்த ஆலோசனைச் சபையால் எந்தப் பயனும் இல்லை என்று அறிந்தும் கொதித்து எழுவது போல் நடிக்கிறார்கள். அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இந்த ஆலோசனைச் சபையை வரவேற்றன. ரஷ்யா இந்த ஆலோசனைச் சபையை எதிர்த்துள்ளது. ரஷ்ய எதிர்ப்பின் பின்னணியில் இந்தியா இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப் படுகிறது.

இந்த குழு அமைப்பை சிங்களப் பேரினவாதியான விமல் வீரவன்ச என்னும் இலங்கை அரசின் அமைச்சர் கடுமையாக எதிர்த்ததுடன் இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகளின் பணியகக் கட்டிடத்தை மக்கள் முற்றுகை செய்து அங்கு வேலை செய்பவர்களை ஐநா தனது ஆலோசனைச் சபையைக் கலைக்கும்வரை தடுத்து வைத்திருக்க வேண்டும் என்று முழங்கியுள்ளார். இதை இலங்கை அரசு பகிரங்கமாக இது வரை கண்டிக்கவில்லை. இந்தச் செய்தி கொழும்புப் பத்திரிகைகளில் வெளிவந்த போது அதற்கு பின்னூட்டம் எழுதியவர்களில் பெரும்பாலோனோர் விமல் விரவன்சவின் கூற்றைக் கண்டித்துள்ளனர். ஆனால் இது பற்றி ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளரிடம் இன்னர் சிற்றி பிரெஸ் என்னும் ஐநா ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய போது அது பத்திரிகைகளால் தவறாகப் பிரசுரித்திருக்களாம அல்லது ஒரு காந்தீய வழி ஒத்துழையாமையாக இருக்கலாம் என்றும் அதற்கு இலங்கையைப் பாராட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். எனக்குத் தெரிந்தவரை காந்தீயம் என்பது ஒரு காந்தீய வழிப்போராளி தன்னைத் தானே இம்சைக்கு உள்ளாக்குவார் அவர் மற்றவர்களை ஒரு போதும் பணயக் கைதிகளாக்க மாட்டார். இந்த ஐநாவின் பேச்சாளர் ஒரு இலங்கை அரசின் பேச்சாளர் போன் ஏன் செயற்படுகிறார்.

ஐநா ஆலோசனை தொடர்பான சந்தேகங்கள்
பான் கீ மூன் ஒரு ஆலோசனைச் சபையைத் தான் அமைத்துள்ளார் விசாரனைச் சபையை அல்ல. அதற்கு வழங்கப் பட்டுள்ள நான்கு மாதங்கள் இலங்கைப் போர் குற்றம் தொடர்பாக செவ்வனவே உண்மைகளைக் கண்டறியப் போதுமானவை அல்ல என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

இந்த ஆலோசனை சபை நாலு மாதங்களின் பின்னர் எந்த அறிக்கையும் சமர்பிக்காமல் விடலாம் என்று ஐநா தெரிவித்தது ஏன்? இது இறுதியில் ஒரு வெற்று வேட்டாக முடியுமா?

இந்த ஆலோசனைச் சபையைத் தொடர்ந்து எடுக்கப் படவிருக்கும் அடுத்த நடவடிக்கைகள் என்ன என்றுபற்றி இதுவரை எதுவும் கூறப்படவில்லை.

இந்த ஆலோசனை சபை தொடர்பாக தமிழர்களுக்கான மனித உரிமைச் செயற்பாட்டாளராகிய பிரான்ஸ்சை சேர்ந்த கிருபாகரன் அவர்கள் தெரிவித்த கருத்து: இந்த ஆலோசனைச் சபை துருப்புச் சீட்டுக்கள் இருக்க மற்றச் சீட்டுக்கள் விளையாடி வெற்றி பெற்றது போல் அமையலாம் (புறக் கம்மாரிஸ்). அதாவது முடிவில் இலங்கை அரசிற்குப் பாராட்டுத் தெரிவித்து விட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் போர் குற்றம் புரிந்தார்கள் என்று தனது முடிவைத் தெரிவிக்கலாம்.

தமிழர்களுக்காக செயற்படும் பல அமைப்புக்கள் இலங்கையில் 1956 இல் இருந்து இனக் கொலை நடக்கிறது என்று குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கான ஆதாரங்களையும் அவை முன்வைக்கத் தயாராக இருக்கின்றன. ஆனால் இதற்கு பன்னாட்டு அமைப்புக்களிடமிருந்து ஆதரவு கிடைக்கவில்லை. தமிழர்கள் தாமாக வே இலங்கை அரசின் மீது போர்குற்ற வழக்குத் தொடரும் சாத்தியம் உண்டு. அதிலிருந்து இலங்கையைப் பாதுகாக்கவும் அதை திசை திருப்பவும் பன்னாட்டு மட்டத்தில் நடக்கும் சதிதான் போர் குற்றம் தொடர்பான சர்ச்சை என்று பல தமிழர்கள் கருதுகிறார்கள்.

பான் கீ மூன் ஐநா பொதுச் செயலர் பதவிக்குப் போட்டியிட்டபோது தனது வேட்பாளரைப் போட்டியில் இருந்து விலகச்செய்து அவரது வெற்றிக்கு இலங்கை பெரும் பங்காற்றியது. பான் கீ மூன் எப்போதும் இலங்கை விவகாரத்தில் பக்கச் சார்பற்றாவராக நடந்து கொண்டதில்லை. அவரது நெருங்கிய நண்பரும் ஆலோசகருமான விஜய் நம்பியார் ஒரு தமிழின விரோதி. இந்நிலையில் பான் கீ மூனின் நிர்வாகத்தில் தமிழர்களுக்கு நியாயமான எதுவும் கிடைக்காது.

Wednesday 30 June 2010

Firewall இல்லாமல் தாயானாள் அவள்


யாஹூ அரட்டையில் மலர்ந்த உறவு
மின்னஞ்சலில் மென்னையான கொஞ்சல்கள்
நெற்கபேயில் நேருக்கு நேராக சந்திப்பு
வலயத்தில் ஒரு தனியறை ஏற்பாடு
மென் பொருட்கள் வன்பொருட்களாகின
கருவித்தொடர்களில்(Tool Bar) தடவித் தொடர்ந்தது
அசைவூட்டமும் மேலோடலும் மிகுந்தது(animation and browsing)
அவன் அணை மீறி தரவேற்றினான்
அவள் அணைபட்டு தரவிறக்கினாள்
பிணைந்தனர் நெருப்புணர்வில்
துடித்தனர் காம நெருப்பணைக்க
மறந்தனர் அங்கே நெருப்பணையை(firewall)
தட்டத் தவறினர் அழிப்பொத்தானை(delete button)
முடியாமற் போனது நிலைமீட்டல்(Reset)
தாயானாள் அவள்! தந்தையாக மறுத்தான் அவன்!!

Tuesday 29 June 2010

பிரித்தானியத் தமிழர் பேரவை இலங்கையை உளவு பார்த்ததா?


இலங்கை அரசிடம் அகப்பட்டு ஒநத்துழைத்துக் கொண்டிருக்கும் அல்லது 2006இல் இருந்து சேர்ந்தியங்கும் கேபி எனப்படும் குமரன் பத்மநாதனின் ஏற்பாட்டின் பெயரில் வெளிநாடுகளில் இருந்து ஒன்பது பேர் இலங்கை சென்றனர். இவர்களைப் புலி ஆதரவாளர்கள் என்று இலங்கை அரசாங்கம் சொல்கிறது. இந்த ஒன்பது பேரின் விபரம்:
  • பிரித்தானியா: சார்ள்ஸ் அன்ரோனிதாஸ், மருத்துவர் வேலாயுதம் அருட்குமார், சிறிபதி சிவனடியார், விமலதாஸ்
  • பிரான்ஸ்: கெங்காதரன்
  • சுவிஸ்லாந்து: மருத்துவர் சந்திரா மோகன் ராஜ்
  • அவுஸ்திரேலியா: மருத்துவர் ரூபமூர்த்தி
  • கனடா: பேரின்பநாயகம், சிவசக்தி

இலங்கை சென்ற இந்த ஒன்பது பேரையும் பலரும் துரோகிகளாகவும் கருதுகின்றனர்.

இவர்களில் ஒருவர் பிரித்தானியாவில் இருந்து சென்ற மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் அவர்களைப்பற்றி ஒரு பேட்டி பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் தொலைக்காட்சியான ஜீரீவியில் ஒளிபரப்பானது. அது மட்டுமா இவரது காணொளிப் பேட்டி tamilnet இணையத் தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. tamilnet இணையத் தளத்தைப் பொறுத்தவரை பேட்டிகளை எடுப்பது வழமையான ஒன்றல்ல. அதிலும் காணொளிப் பேட்டி. அதில் அவர் பல மர்மங்களைத் துலக்கியுள்ளார். அப்பேட்டியை இங்கு காணலாம்:tamilnet இணையத் தளம்

பிரித்தானியத் தமிழர் பேரவையைச் சேர்ந்த ஸ்கந்ததேவா என்பவரை ஜீரிவீயின் பிறேம் பேட்டி கண்டு ஒளிபரப்பினார். அதில் கூறப்பட்டவை:
  • மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் பிரித்தானியத் தமிழர் பேரவையின் ஒரு ஆயுட்கால் உறுப்பினர்.
  • அவர் இலங்கை சென்றது அவரது தனிப்பட்ட பயணம்.
  • மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் அவர்கள் இலங்கை சென்றமைக்கும் பிரித்தானியத் தமிழர் பேரவைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
  • மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார்மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.
tamilnet இணையத் தளத்திற்கு மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் அவர்கள் வழங்கிய பேட்டியில் மிக முக்கியமானவையும் இதற்கு முன் அறியப்படாதவையுமான பல தகவல்கள் உள்ளன.

மற்றப் ஒன்பது பேரில் எவரையும் ஏன் tamilnet இணையத் தளம் பேட்டி காணவில்லை? அவரைப்பற்றிய பேட்டி ஏன் ஜீரிவீயில் ஒளிபரப்பானது? இவற்றைச் சேர்த்தும் பார்க்கும் போது இலங்கை அரசையும் மற்ற எட்டுப் பேரையும் உளவு பார்க்க மருத்துவர் வேலாயுதபிள்ளை அருட்குமார் அவர்களை பிரித்தானியத் தமிழர் பேரவை அனுப்பியதா?

இந்த ஒன்பது பேரின் இலங்கைப் பயணத்தைத் தொடர்ந்து இலங்கை அரசு தமிழர்களின் புலனாய்வுத் துறை பலமாக இருப்பதாக மீண்டும் ஒரு முறை அறிவித்தது.

தமிழரின் உயிரிலும் உமக்குத் தமிழ் மேலானது


வாழாத இனமொன்றின்
ஆளாத மொழியொன்று
செம்மையானால் என்ன

உயிரிலும் மேலான தமிழ்
என முழங்கியதற்கு
அர்த்தம் புரிந்தது இன்று

தமிழரின் உயிரிலும்
உமக்குத் தமிழ் மேலானது
அதற்கு ஒரு மாநாடு

கலைஞர் தொலைக்காட்சியில்
கணிகையர் பேசும் "ரமிளை"
முதலில் செம்மையாக்குவீர்

தனிப்பட்டோர் துதி பாடி
அவர்தம் விரோதிகளில்
வசை பாடும் கவியரங்கு

திடீர் நூடில்ஸ் அல்ல இடியப்பச் சிக்கலிது


சூளக வம்சத்தை சுடுகாடனுப்பி
மகா வமசத்தை வழிகாட்டியாக்கி
தமிழனைப் பகையாளியாக்கினீர்
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்

வேதியனையும் குழந்தையையும்
கொதிதாரில் போட்டு கொன்று
பௌத்தம் வாழ்க என உரக்கக் கத்தினீர்
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்

சோல்பரி என்றொரு பேமானி
போட்டுவைத்த சிக்கலிது
என்றோ தீர்திருக்க வேண்டியது
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்

ஆட்சி மொழி உம் மொழியென்றீர்
கேட்க வந்தோரை பாராளமன்று முன்
காடையரால் உதைத்துத் தள்ளினீர்
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்

இந்திரா காந்தியின் பேராதிக்க கொள்கை
போட்டு மூட்டிய தீ சோறு சமைக்கு முன்னே
சல்லடையாகப் பிணமாய்ச் சரிந்தார்
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்

ராஜீவ் காந்தியின் முட்டாள்த்தனம்
பிசைந்து தப்பும் சப்பாத்தியென
எண்ணி ஏமாந்த கதையறிவீர்
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்

தமிழன் கறி விற்று மகிழ்ந்த
கதை தன்னை மறந்திட்டீரோ
முள்ளிவாய்க்கால் கொள்ளியும் மறந்தீரோ
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்

டட்லி-செல்வா அரசை இட்லி என்றீரே
மசால வடை அரசென இகழ்ந்தீரே
டட்லியில் நல்லெண்ணை மணந்தது அறியீரோ
இன்று திடீர் நூடில்ஸ் அல்ல என்கிறீர்

புளித்துப் போன அப்பம் இது
கருகிப் போன "கவும் பணியாரம்" இது
நாறிப்போன கருவாடிது
தீர்க்க முடியா இடியப்பச் சிக்கலிது

அன்று இந்தியாவை எதிரியென்றீர்
இந்தியா உமக்கிருக்கின்றது என்கிறீர்
இந்தியா என்ற ஒரு நாடு இருக்கும் வரை
தமிழன் தலை நிமிர முடியாதென என நாமறிவோம்

Monday 28 June 2010

சிரிக்க: பெண் மொழியும் ஆண் மொழியும்


பெண்கள் சொல்பவையும் அவற்றின் பொருள்களும்

ஆம் = இல்லை
இல்லை = ஆம்
நீ யே முடிவு செய்து கொள்= பின்னால் எனது நச்சரிப்பு தாங்கமாட்டாய்
ஏதோ செய்திடு= செய்தியோ மவனே தொலைச்சுப் புடுவன்
நீ ஆண்மையானவன்= உன் வியர்வை நாற்றம் தாங்க முடியவில்லை
நீ என்னை எந்த அளவு விரும்புகிறாய்=விலை உயர்ந்த நகை ஒன்று தேவைப்படுகிறது
நான் குண்டாய் இருக்கிறேனா?= சொல்லடா நான் அழகாய் இருக்கிறேன் என்று
எப்படிக் கதைப்பது என்று பழகிக்கொள்= சொல்வதற்கெல்லாம் தலையாட்டு
நான் சொல்வது காதில் விழவில்லையா? = மவனே தொலைந்தாயடா

ஆண்கள் சொல்பவையும் அவற்றின் பொருள்களும்
களைத்துப் போய் இருக்கிறேன்= களைத்துப் போய் இருக்கிறேன்
பசிக்குது= பசிக்குது
சரி= ஏதோ செய்து தொலை
இன்று சினிமா போவோமா?= இன்று இரவு எனக்கு நீ வேண்டும்
இன்று வெளியில் சென்று சாப்பிடுவோமா?=இன்று இரவு எனக்கு நீ வேண்டும்
உனது ஆடை அழகாக இருக்கிறது= உன் மார்பைப் பார்க்க ஏதோ செய்கிறது
எனக்கு போரடிக்கிறது=எனக்கு நீ வேண்டும்
எனக்குத் தூக்கம் வரவில்லை=எனக்கு நீ வேண்டும்
சரி கொஞ்ச நேரம் கதைப்போம்=எனக்கு நீ வேண்டும்

Sunday 27 June 2010

ஐநா ஆலோசனைச் சபை: ரஷ்யா பாய்ந்ததின் பின்னணி என்ன?


மாக்சிசம் என்று புரட்சி செய்து லெனினிசமாகி இஸ்டாலினிசமாகத் திரிபுபட்டு இப்போது மபியாஇசத்தில் மாட்டுப்பட்டிருக்கும் ரஷ்யாவிற்கு கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப் பிறகு நாளாந்தம் அறிக்கை விடுவது வேலை. ஆனால் இலங்கை தொடர்பாக அறிக்கை விடுவது அதன் வழமையல்ல. லெனின் தனது ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் உச்சக் கட்டம் என்னும் நூலில் சொன்னார் முதலாளிகள் உலகத்தை தங்களுக்குள் பிராந்திய ரீதியாகப் பங்கிட்டுக் கொள்வார்கள் என்று. ரஷ்யாவைப் பொறுத்தவரை இலங்கை இந்தியாவின் பங்கிற்கு உட்பட்டது. இந்த அடிப்படையிலேயே ஐநா மனித உரிமைக்கழகத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவந்த தீர்மானதை இலங்கைக்கு பாராட்டுத் தெரிவிக்கும் தீர்மானமாக இந்தியா மாற்றியபோது தென் ஆபிரிக்கா இந்தியாவிற்கு இசைவாக வாக்களித்தது.

இலங்கையில் நடந்த இனக்கொலையை இனக்கொலையாக ஏற்றுக் கொள்ளாமல் குறைந்த அளவு ஒரு போர் குற்றம் நடந்ததாக சர்வ தேச மன்னிப்புச் சபை, சர்வ தேச நெருக்கடிக் குழு, சர்வ தேச மனித உரிமைக் கழகம் ஆகியவை கூறி அது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று ஒரு வருடமாக வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பான சாட்சியங்களும் முன் வைக்கப்பட்டன. இந்த சாட்சியங்களை சீன நிறுவனம் ஒன்றின் உதவியுடன் இலங்கை அழிக்க முயல்வதாகவும் செய்திகள் வந்தன. சனல்-4 தொலைக்காட்சியும் சில ஆதாரங்களை முன்வைத்தது. அது போலியானது என இலங்கை அரசும் இல்லை அது போலியானது அல்ல உண்மையானது என்று ஐநா விசாரணையும் முடிபுகளை வெளிவிட்டன.

சர்வ தேச மன்னிப்புச் சபை, சர்வ தேச நெருக்கடிக் குழு, சர்வ தேச மனித உரிமைக் கழகம் ஆகியவற்றின் வற்புறுத்தல் மூலம் ஐக்கிய நாடுகள் சபையின் செயலர் பான் கீ மூன் இந்த ஆண்டு மார்ச் மாதம் 5-ம் திகதி இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடார்பாக தனக்கு ஆலோசனை வழங்க ஒரு நிபுணர் குழு அமைக்கப் படவிருப்பதாகத் தெரிவித்தார். மூன்று மாதகாலமாக அது இழுத்தடிக்கப் பட்டது. ஐநாவைச் சேர்ந்த லியோம் பொக்ஸ் அவர்கள் இலங்கை சென்று பேச்சு வார்த்தை நடாத்திய பின்னர் நிபுணர் குழு அமைக்கப் படும் என்று சொல்லப் பட்டது. அவர் இலங்கை வந்தவுடன் மேலும் பலர் இலங்கை வந்தனர். ஜப்பானின் யசூசு அகாசி வந்து இலங்கை அரசின் பேச்சாளர் போல் பேசினார். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சிறப்புத் தூதுவர் ஒருவர் இலங்கை வந்தார். மௌனித்திருந்த எரிக் சொல்ஹெய்ம் வாய்திறந்தார். இந்தியா சும்மா இருக்கவில்லை நடிகர்களை அனுப்பிக் கொண்டிருக்கிறது.
ஐநா செயலர் அறிவித்தது அலோசனைக் குழுவே விசாரணைக் குழு அல்ல. இருந்தும் இலங்கை துள்ளிக் குதித்தது. இலங்கை எதிர் கட்சிகள் முழங்கின. புலம் பெயர் தமிழர்களிடம் இலங்கை தோற்று விட்டது என்றன சிங்கள இனவாதக் குழுக்கள். இலங்கை ஆலோசனைக் குழு அமைத்ததைக் கண்டித்தது. இந்தியா மௌனமாக இருந்தது. அமெரிக்கா வரவேற்றது. ரஷ்யக் கரடி ஒரு பாய்ச்சல் பாய்ந்தது. விரைந்து ஒரு கண்டன அறிக்கையை வெளியிட்டது.

  • இலங்கையில் உள்நாட்டு விசாரணைக்காக இலங்கை அரசு குழுவொன்றை அமைத்துள்ள நிலையில் இவ்வாறான குழுவொன்று பான் கீ மூனுக்கு தேவையற்றது என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
இலங்கை தனது நாட்டு இறைமைக்குள் ஐநா தலையிடமுடியாது என்று ஒரு பெரும் கூச்சலிட்டது. இலங்கை இந்த ஆலோசனைக் குழுவால் பெரிதும் ஆடிப் போய்விட்டது என்பது அது விடும் அறிக்கைகளில் இருந்து தெரிய வருகிறது. இலங்கைக்கு ஒரு ஆறுதல் தேவைப்பட்டது. அது ரஷ்யாவிடம் இருந்து விரைந்து வந்தது.

2009-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பிரித்தானிய சனல்-4 தொலைகாட்சி கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக தமிழர்கள் சிங்களப் படையினரால் கொல்லப்பட்டதாக செய்தி வந்தவுடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா அவசரமாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். சனல்-4 தொலைகாட்சியின் படுகொலைகள் சம்பந்தமாக தாம் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக அவ்வறிக்கையில் தெரிவித்தார். இன்று வரை அந்த விசாரணைக்கு என்ன நடந்தது என்று தெரியாது. அந்த காணொளியை கண்ட இந்தியத் தரப்பு ஏன் அதிர்ச்சியடந்தது? இலங்கை படையுடன் இந்திய்ப் படைகளும் இணைந்து செயற்பட்டதாலா? அதற்கான காணொளி ஆதாரங்கள் இருக்கலாம் என்று இந்தியா அதிர்ச்சியடைந்ததா? இலங்கையில் நடந்த போர் குற்றம் தொடர்பான விசாரணை வரும் பட்சத்தில் அதில் இந்தியப் பங்களிப்பு வெளிவரும் என்று பயந்து இந்தியா ரஷ்சியாவூடாக விசாரணைக்கு முட்டுக் கட்டு போடுகிறதா?

இலங்கையில் நடக்கும் வல்லாதிக்க நாடுகளின் போட்டியில் இந்தியாவிற்குப் பின்னால் தான் இலங்கை நிற்கும். 1987இல் இலங்கையின் "இறைமையில்" இந்தியா தலையிட்டபோது வாய் மூடி இருந்த ரஷ்சியாக் கரடி இந்த வெறும் ஆலோசனைக் குழுவிற்கு மட்டும் ஏன் இந்தப் பாய்ச்சல் பாய்கிறது?

Times of India விற்கு ராஜபக்சவிற்கு இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்சே அளித்த பேட்டியில் போர் குற்ற விசாரணை தொடர்பாகக் கேட்டபோது
"Why should I worry about others? If India and neighbours are good with me, that is enough for me. நான் ஏன் மற்றவர்களைப் பற்றிக் கவலைப் படவேண்டும் இந்தியாவும் மற்ற நல்ல அயலவர்களும் என்னுடன் நல்லபடியாக இருக்கிறார்கள். அது எனக்கு போதும் என்றார். இரஷ்சியா தன்னுடன் இருப்பதாக அவர் கூறவில்லை. ரஷ்யாவின் கூற்றுக்கு அவர் நன்றி தெரிவிக்கவுமில்லை. இதிலிருந்து தெரிகிறது ரஷ்யாவின் பாய்ச்சலின் பின் யார் இருக்கிறார்கள் என்று.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...