Wednesday 7 March 2012

என்று முடியும் இந்த இந்தியத் துரோகம்?

ஆரியர்களைப் பொறுத்தவரை தமிழன் சூத்திரன் அவன் ஆளப்படவேண்டியவன்; அவன் ஆளக்கூடாது. இந்த அடிப்படையில்தான் இந்தியா தமிழ் ஈழத்தையும் தமிழர்களி விடுதலைப் போரையும் அன்றிலிருந்து இன்றுவரை எதிர்த்து வருகிறது. ஆனால் இதைப் பல தமிழர்கள் இன்னும் உணராமல் இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரியது.

ஜவகர் லால் நேரு

தமிழ் அரசியல் கட்சியான தமிழ் காங்கிரசுக் கட்சியின் தலைவர் ஜி. ஜி. பொன்னம்பலம் அவர்கள் இலங்கை பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியில் இருந்து விடுபட்ட பின்னர் இலங்கை வாழ் தமிழர்கள் அனைவரையும் ஒன்றிணக்க முற்பட்டார். அவர் தனது காங்கிரசையும் இந்தியாவிலிருந்து வந்து இலங்கையின் மலைநாட்டுப்பகுதியில் குடியேறிய தமிழர்களின் தலைவராக இருந்த ஆறுமுகம் தொண்டமான் தலைமையில் இயங்கிய தோட்டத் தொழிலாளர் காங்கிரசையும் ஒன்றிணைக்கும் தனது எண்ணத்தை திரு எஸ் தொண்டமான் அவர்களிடம் தெரிவித்தார். திரு தொண்டமானுக்கும் இது நல்ல ஆலோசனையாகப்பட்டது . தொண்டமான் இது தொடர்பாக அப்போது இந்தியப் பிரதமராக இருந்த ஜவகர்லால் நேரு அவர்களிடம் ஆலோசனை கேட்டார். பேரினவாதியான நேரு, தொண்டமானைப் பெரும்பான்மை சமூகத்துடன் ஒத்துழக்குமாறு பணித்தார். தொண்டமானும் அதன்படியே பொன்னம்பலத்தின் ஆலோசனையை நிராகரித்தார். ஆனால் சிங்களப் பேரினவாதிகள் தோட்டத்தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்தபோது தொண்டமான் நேருவிடம் முறையிட்டார். நேரு இது உள்நாட்டு விவகாரம் என்று பகிரங்கமாகச் சொல்லித் தட்டிக் கழித்தார். இங்கு ஆரமபமானது இந்திய ஆட்சியாளர்கள் இலங்கைத் தமிழர்களுக்கு அள்ளி வைப்பது.

சிறிமா சாஸ்த்திரி ஒப்பந்தம்
இதன் பின் 1964இல் இந்தியா இலங்கையுடன் சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தம் சர்வதேச நியமங்களுக்கு எதிராக கைச்சாத்திட்டு 150,000 தமிழர்களை நாடற்றவர்களாக்கியது. இலங்கையில் வாழ் அனைத்து தமிழர்களும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்த போதிலும் அவர்களின் எதிர்ப்பிற்கு செவி சாய்க்காது அப்போதையஇந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்த்திரி இந்திய - பாக்கிஸ்த்தான் போரில் இலங்கையைப் பாக்கிஸ்த்தான் பக்கம் சாயாமல் தடுப்பத்ற்காக தமிழர்களின் வாழ்வைப் பலி கொடுத்தார்.

இந்திரா காந்தியின் சதி

1977இற்குப் பிறகு இலங்கையில் அமெரிக்கா திருக்கோணாமலையில் சிங்கப்பூர் நிறுவன மொன்றின் பெயரில் தனது கடற்படைகளுக்கான எரிபொருள் மீள் நிரப்பு வசதிகளையும் சிலாபத்தில் அமெரிக்கா ஒரு வானொலி அஞ்சல் நிலையம் என்ற போர்வையில் தனது கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான தொடர்பாடல் வசதிகளையும் ஏற்படுத்த முயன்றது. இது இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்பதை உணர்ந்த அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி இலங்கையைத் தனது வழிக்குக் கொண்டுவர தமிழர்கள் முதுகில் ஏறினார். தமிழர்கள் மத்தியில் பல ஆயுதக் குழுக்களை உருவாக்கி  படைத்துறைப் பயிற்ச்சி வழங்கி இலங்கை அரசுக்கு எதிரான படை நடவடிக்கைகளை அக்குழுக்களைக் கொண்டு செய்வித்தார். அந்தக் குழுக்களிடை ஒரு முரண்பாட்டு நிலையையும் உருவாக்கினார். ஆர்ப்பாட்டங்கள் உண்ணா விரதங்கள்  சத்தியாக் கிரகங்கள் என இருந்த தமிழர் சிங்களவர்களுக்கு இடையிலான பகைமை ஒரு பெரும் ஆயுதப் போராக உருவெடுத்து சிங்களவர்களும் தமிழர்களும் நிரந்தர விரோதிகளாகினர். தமிழர்களை ஆயுதபாணிகளாக்கி சிங்களவர்களுடன் சண்டையிட வைத்து பின்னர் சிங்களவர்கள் பக்கம் சேர்ந்து தமிழர்களை அழித்தொழிக்க சகல உதவியும் செய்து தமிழர்களை நிர்க்கதி ஆக்கியது இந்தியா.

ராஜீவ் காந்தி
இந்திரா காந்தி கொல்லப்பட்டபின்னர் இந்தியப் பிரதமராக வந்த அரசியல் கற்றுக் குட்டியான ராஜீவ் காந்தி இலங்கையில் தமிழர்கள் படைபலத்தில் வளர்ந்து செல்வதைப் பொறுக்காமல் அதற்கு முற்றுப் புள்ளி வைக்க தனது  படையை இலங்கைக்கு அனுப்பி தமிழர்களை கொன்று குவித்தார். தமிழ் ஆயுதக் குழுக்கள் யாவற்றையும் தன்னிடம் ஆயுதங்களை ஒப்படைக்கும் படி வற்புறுத்தினார். தமிழர்களின் பாதுகாப்புக்கு தான் உறுதி என்று பொய் கூறி தானே தனது படையினர் மூலம் தமிழர்களைக் கொன்றார். தமிழர்கள் இலட்சக்கணக்கில் இடப்பெயர்வுக்கு உள்ளாகினர். இலட்சக் கணக்கான தமிழர்கள் வீடுகள் அழிக்கப்பட்டன. பல தமிழ்ப் பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். தமிழர்களை ஏமாற்ற இலங்கை அரசியல் அமைப்பிற்கு 13வது திருத்தம் என ஒன்று கொண்டுவரப்பட்டது. அது நிறைவேற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை என திரைமறைவில் சிங்களவர்களுக்கு சொல்லப்பட்டது.

மாலைதீவுத் தாக்குதல்
மாலை தீவை இந்திய தனது வழிக்குக் கொண்டுவர தமிழ் ஆயுதக் குழுக்களில் ஒன்றை அங்கு அனுப்பி ஆட்சி மாற்றத்திற்குப் போராட வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்தியா மாலைதீவில் ஒரு கடற்படைத் தளம் அமைத்தது. மாலைதீவில் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்ட பழி தமிழர்கள் மீது போடப்பட்டது.

சதீஸ் நம்பியார்
2002 விடுதலைப் புலிகளுக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் கைச்சாத்திடப் பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழர் பிரதேசங்களில் அமைக்கப் பட்டிருந்த உயர் பாதுகாப்பு வலயங்களில் இருந்து இலங்கைப் படைகள் வெளியேறத் தயாராக இருந்த வேளையில் இந்தியா தனது சதீஸ் நம்பியாரை இலங்கைக்கு அனுப்பி அதைத் தடுத்தது. இந்தியா தமிழர்களுக்கு செய்த கணக்கில்லத் துரோகங்களில் அதுவும் ஒன்று.

சம்பூர் சதி

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் சம்பூரில் இந்தியா மின் உற்பத்தி நிலையம் அமைக்கவென அங்கு வாழ்ந்த தமிழர்களை  இலங்கைப் படையினர் இந்தியாவின் உதவியுடன்அடித்து விரட்டினர். அவர்கள் ஆறு வருடங்களுக்கு மேலாக ஏதிலிகளாக அகதி முகாம்களில் வாழ்கின்றனர்.

இறுதிப் போர்
இலங்கையில் சிங்களப் படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் போர் தொடங்கும். சிங்களப் படைகளின் கைகள் ஓங்கி அவர்கள் முன்னேறும் நிலை ஏற்பட்டால் விடுதலைப் புலிகள் பின் வாங்குவது போல் பின்வாங்கிக் கொண்டே சிங்களப் படைகள் மீது தாக்குதல் தொடுத்து ஆளணி இழப்புக்களை சிங்களப்படைகளுக்கு ஏற்படுத்துவார்கள். முன்னேறும் படைகள் மீது அவ்வப்போது பக்கவாட்டில் ஊடறுப்புத் தாக்குதல்களும் பின்னால் சென்று பின்னிருந்து தாக்குதல்களும்  நடக்கும். இதனால் ஏற்படும் ஆளணி இழப்புக்களையும் காயப்பட்டு களமுனையில் இருந்து வெளியேறும் ஆளணிக் குறைவையும் சமாளிக்க முடியாமல் ஒரு கட்டத்தில் சிங்களப்படைகள் பின்வாங்கும். பல சிங்களப் படையினர் உயிர் தப்புவதற்காக தம்மைத் தாமே காயப் படுத்திக்கொண்டு களமுனையில் இருந்து வெளியேறுவர். பலர் தப்பி ஓடுவர். 2009இலும் கடும் போர் நடந்த போது சிங்களப்படைகளுக்கு ஏற்பட்ட ஆளணி இழப்புக்களை இலங்கையின் அயல் நாடு ஒன்றில் இருந்து வந்த படையினர் ஈடு செய்தனர். முதலில் 10,000 படையினரும் பின்னர் இன்னொரு 10,000 படையினரும் அந்த அயல் நாட்டில் இருந்து வந்தனர். பல சிங்கள ஊடகங்கள் இதை அம்பலப்படுத்தின. அவை பொட்டு வைத்த படையினரும் தலைப்பாகை அணிந்த படையினரும் இலங்கையில் தமிழர்க்கு எதிரான போரில் பங்கேற்பதை புகைப்படங்கள் காணொளிகள் மூலம் அம்பலப் படுத்தின. இப்படைகள் எந்த நாட்டில் இருந்து வந்தன என்பதை எம்மால் இலகுவில் ஊகிக்க முடியும்.

பேரழிவைத் தடுப்பதைத் தடுத்த நாடு எது

2009 இறுதிப் போரின்போது இலங்கை அரசு போர் முனையில் வெறும் 70,000 மக்கள் மட்டுமே இருக்கின்றனர் என்று  பொய் சொல்லியது. அதை அப்போதைய இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சரியென வாதிட்டார். ஆனால் இந்தியாவிற்கு அதன் உளவுத்துறை மூலமும் செய்மதிப் படங்கள் மூலமும் போர் முனையில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் அகப்பட்டுள்ளனர் என்று தெரியும். போரால் பல பொது மக்கள் கொல்லப் படப் போகிறார்கள் என்பதை உணர்ந்த மேற்கு நாடுகள் குறிப்பாக பிரான்ஸும் பிரித்தானியாவும் இலங்கையில் ஒரு படை நடவடிக்கை மூலம் அப்பாவிப் பொது மக்களைப் பாதுகாக்க முற்பட்ட போது அதைத் தடுத்த நாடு எது? அமெரிக்காவிடம் இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்யப்போவதாக எம்மிடம் உறுதியளித்துள்ளது என்று பொய் சொன்ன நாடு எது?

முட்கம்பி வேலி
2009 போருக்குப் பின்னர் பல இலட்சம் தமிழர்கள் ஏதிலிகளாக முட்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டதை பல நாடுகளும் மனித உரிமை அமைப்புக்களும் கண்டித்தன. அனர்த்தம் காரணமாக ஒரு நாட்டில் வீடிழந்தவர்களுக்கு அரசு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும். ஆனால் அவர்களை முட்கம்பிகளுக்குள் துப்பாக்கி முனையில் தடுத்து வைத்திருக்க முடியாது. அவர்களுக்கு நடமாடும் சுதந்திரம் இருக்கவேண்டும். இதைத்தான் சகல மனிதாபிமானமுடையோரும் மனிதாபிமான அமைப்புக்களும் நாகரிக வளர்ச்சியடைந்தவர்களும் எடுத்துக் கூறுகின்றனர். இந்தியாவின் கருத்து வேறு விதமாக இருந்தது. இந்திய பாராளமன்ற உறுப்பினரான சுதர்சன நாச்சியப்பன் அவர்கள் கருத்து: சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாதுகாப்பிற்காகவே முட்கம்பிகள் போடப்பட்டுள்ளன.

சனல் - காணொளி தொடர்பான இந்திய விசாரணை
2009 போருக்குப் பின்னர் சனல் - 4 தொலைக்காட்சி இலங்கை போர்க்குற்றம் தொடர்பான முதல் காணொளியை வெளிவிட்டவுடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சு அவசர அவசரமாக ஒரு விசாரணைக்கு உத்தரவிட்டது. அந்த விசாரணைக்கு என்ன நடந்தது என்று இது வரை தெரியவில்லை. இலங்கையில் நடந்த போர்க்குற்றத்திற்கு இந்தியாவின் பங்களிப்புத் தொடர்பான காணொளிக்காட்சிப்பதிவுகள் ஏதாவது இருகிறதா என்றா இந்தியா அவசரப்பட்டு விசாரணைகு உட்பட்டது.

2009இல் மனித உரிமை மீறலைப் பாராட்டிய எருமை இந்தியா

2009மே மாதத்தில் இலங்கைப் போர் முடிந்தவுடன் அதற்கு இந்தியா வழங்கிய பங்களிப்பு சரித்திரதில் இடம்பெறாமல முடி மறைக்கப்படலாம் என ஒரு படைத்துறை ஆய்வாளர் எழுதினார். இலங்கையில் அதிபர் மஹிந்த ராஜ்பக்ச உடபடப் பலர் நாம் இந்தியாவின் போரை நடாத்தி முடித்தோம் என்றும் இந்தியாவின் உதவியின்றி நம்மால் போரை நடாத்தி முடித்திருக்க முடியாது என்றும் தெரிவித்து வருகின்றனர். போர் முடிந்தவுடன் இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவை அழைத்து இந்தியா தன்னிடம் இலங்கை போர்க்குற்றம் புரிந்தமைக்கான செய்மதி ஆதாரப் படங்கள் இருப்பதாகக் கூறி இனி நீங்கள் எம் சொற்படி கேட்க வேண்டும் என்று கூறினர். இந்தியாவின் நோக்கம் இலங்கையில் 13வது திருத்தத்தை அமூல் படுத்த இந்தியா சொல்வதை இலங்கை கேட்க வேண்டும் என்பதே.  அப்போது இலங்கை போரின் போது கொழும்பு டில்லி இடையிலான உரையாடல்களின் ஒலிப்பதிவுகள் தம்மிடம் இருப்பதாகக் கூறி அதை தாம் அம்பலப் படுத்துவோம் என்றார். அதன் பின்னர் இந்தியா அடங்கி விட்டது. இதன் பின்னர் இலங்கை சொற்படி ஆடிய இந்தியா 2009இல் ஜெனிவாவில் நடந்த மனித உரிமைக் கழகக் கூட்டத் தொடரில் ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையின் போரின் போது மனித உரிமைகள் மீறியதைக் கண்டிக்கும் தீர்மானத்தை மனித உரிமைக் கழக நாடுகளிடை கடும் பிரசாரம் செய்து அதை இலங்கைக்குப் பாராட்டும் தீர்மானமாக மாற்றியது. அப்படிச் செய்ததை இலங்கைப் போரின் பொறுப்புக் கூறல் தொடர்பாக அமைக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழு பெரிய தவறு எனச் சுட்டிக்காட்டியது.

தேர்தலுக்கு முன்னர் போரை முடி என்ற இந்தியா

2009இல் போர் ஆகஸ்ட் மாதம் வரை போகும் என இலங்கை படையினர் திட்டமிட்டிருந்தனர்.2009 மே மாதம் இந்தியப் பொதுத் தேர்தலுக்கு முன்னர் இலங்கையில் போர் முடிக்க வேண்டும் என இந்தியா இலங்கையை வற்புறுத்தியது. அப்பாவிகள் உயிரிழப்பைப் பற்றிக் கவலைப்படாமல் போரை நடத்த வேண்டும் என்று இந்தியா இலங்கையை வற்புறுத்தியது. அதற்கான ஆதாரங்கள் இலங்கையிடம் உள்ளன. அவற்றை இலங்கை பகிரங்கப்படுத்தினால் இந்தியா மீது போர்க்குற்றம் புரிந்ததாகக் கொள்ளப்பட வாய்ப்புண்டு.  இதை வைத்துக்கொண்டுதான் இலங்கை இந்தியாவைத் தன் எண்ணப்படி ஆட்டிப்படைக்கிறது.

2012 ஜெனிவாவிலும் இந்தியா தமிழர்களுக்கு எதிராகவே செயற்படும்

அண்மைக் காலங்களில் இந்தியா ஒரு இலங்கையின் சில்லறைக் கைக்கூலி போல் செயற்பட்டு வருகிறது.  அப்படிப் பட்ட இந்தியாவால் இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைக் கழகத்தில் வாக்களிக்க முடியாது. தமிழ்நாட்டு மக்களின் "கொந்தளிப்பை" கருத்தில் கொள்ள வேண்டிய அவசியம் டில்லிக்கு இல்லை. அவை வெறும் கூச்சல்கள் மட்டுமே என்று டில்லி நன்கு அறியும். தேர்தலில் காங்கிரசுக் கட்சி தமிழ்நாட்டில் பெரும் தோல்வியைச் சந்திக்கலாம் என்ற பயம் ஆளும் கட்சிக்கு இல்லை. ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டால் என்ன எதிராகச் செயற்பட்டால் என்ன காங்கிரசுக் கட்சி தமிழ்நாட்டில் தோல்வியடைவது நிச்சயம். தமிழ்நாட்டில் வெற்றி பெற்று வரும் கட்சிக்கு சில மந்திரிப்பதவிகளைக் கொடுத்து அவற்றை கூட்டணியில் இணைத்து காங்கிரசால ஆட்சி அமைக்க முடியும். இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படாவிடில் இந்தியாவின் தமிழர்களுக்கு எதிரான பல குற்றங்கள் அம்பலமாகும்.

ஆட்சி மாறினால் காட்சி மாறுமா?
உலகெங்கும் தமிழர் வாழும் நாடுகளில் இந்தியக்கைக்கூலிகளாகச் செயற்படும் தமிழர்கள் சிலர் இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு அதைச் சார்ந்து தான தமிழர்கள் தம் விடுதலைக்காக எதையாவது செய்ய முடியும் என்ற பரப்புரைகளைச் செய்து வருகின்றனர். இந்தியா தமிழர்களுக்குச் செய்யும் துரோகச் செயல்களை அவர்களிடம் எடுத்துச் சொன்னால் இப்போது இருக்கும் ஆட்சி மாறினால் தமிழர்களுக்குச் சாதகமான நிலைப்பாட்டை இந்தியா எடுக்கும் என்று சொல்கின்றனர். இப்போது பெரிய நாடுகள் எதுவும் தமது வெளிநாட்டுக் கொள்கைகளை ஆட்சியாளர்கள் மாறும் போது மாற்றுவது இல்லை. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அதன் அதிகார மையமான தென்மண்டலத்தில் உள்ள பார்ப்பனர்களே நிர்ணயிக்கின்றனர்.  இலங்கையின் தமிழர்களின் அவலத்திற்கு அவர்களே காரணம். அவர்கள் ஒரு போதும் தமிழர்கள் உரிமையுடன் வாழ் அனுமதிக்கப் போவதில்லை. இந்தியக் கைக்கூலிகள் வைக்கும் இன்னொரு கருத்து தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வலைக்கு மதிப்பளித்து இந்தியா இலங்கைத் தமிழர்களுக்கு உதவும் என்பது. இந்திய வெளியுறவுக் கொள்கை இந்தியாவின் தேசிய நலனைக் கருத்தில் கொண்டு வகுக்கப்படவேண்டும் ஒரு மாநிலத்தின் மக்களின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டு வகுக்கப்படக் கூடாது என்று தென்மண்டலப் பார்ப்பனர்கள் கருதுகின்றனர். தென்மண்டலப் பார்ப்பனர்கள் இலங்கையில் தமிழர்கள் உரிமை பெறாமல் இருக்க இந்தியத் தேசிய நலன்களையும் பலியிடத் தயாராக இருக்கின்றனர். தமிழர்கள் இனி மாற்றி யோசிக்க வேண்டும்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...