Saturday 13 July 2013

திசை மாறிய அல் ஜசீராவும் பாலியல் போராளிகளும்

துனிசியா, எகிப்து, லிபியா, சிரியா, சவுதி அரேபியா, பாஹ்ரேய்ன் போன்ற நாடுகளில் ஆட்சியாளர்களுக்கு எதிராக 2011இல் மக்கள் கிளர்ந்து எழுந்த போது அவற்றைத் தொடர்ச்சியாக 24 மணி நேரமும் ஒளிபரப்பி மல்லிகைப் புரட்சிக்கு பேருதவி செய்தது அல் ஜசீரா தொலைக்காட்சியாகும்.குடாநாடு அல்லது தீவு எனப் பொருள்படும் அல் ஜசீரா முன்னணி உலக ஊடகமாகும்.

பிபிசி, சி.என்.என் போன்ற மேற்கத்திய ஊடகங்கள் தமது பாராபட்ச நிலைப்பாட்டை மோசமாக்கியபோது ஒரு நம்பிக்கை தரும் ஊடகமாக 1996-ம் ஆண்டு அல் ஜசீரா ஆரம்பிக்கப்பட்டது. இது கட்டார் அரச குடும்பத்தினராலும் மேலும் பல தனியாராலும் நிதி வழங்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்டு. ஆபாகானிஸ்த்தான் போர், ஈராக் போர் போன்றவற்றை பற்றி நன்கு செய்திகளை வழங்கி புகழ் பெற்றது. ஆரம்பத்தில் அரபு மொழியில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஆங்கிலத்திலும் ஒளிபரப்பு ஆரம்பிக்கப்பட்டது.

மேர்சி பதவியில் இருந்து அகற்றப்பட்டதில் இருந்து கட்டாரின் அல் ஜசிரா ஊடகமும் சவுதி அரேபியாவின் அல் அரபியா ஊடகமும் ஒன்றிற்கு ஒன்று முரண்பட்ட நிலையில் இருந்து எகிப்திய நிலைமைகளைப் பார்க்கின்றன. கட்டார் நாடு இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு சார்பான ஒரு நிலையை எடுக்கிறது. சவுதி அரேபியா தாராண்மை வாதிகளுக்கு ஆதரவான ஒரு நிலையை எடுக்கிறது. சவுதி மன்னர் குடும்பம் இசுலாமிய சகோதரத்து அமைப்பை விரும்பவில்லை எனத் தெரிகிறது. சிரியாவில் அரச படைகளின் தாக்குதலில் காயமடைந்தவர்களின் படத்தை அல் ஜசீரா எகிப்தில் மொஹமட் மேர்சியின் ஆதரவாளர்கள் எகிப்தியப் படையினரால் காயப்பட்டதாகக் காட்டியது அல் ஜசீரா.  இது மோர்சிக்கு எதிரானவர்களை அல் ஜசீராவிற்கு எதிராக கிளர்ந்து எழச் செய்துள்ளது.

அல் ஜசீராவின் ஊழியர்களில் 22 பேர் மேர்சி பதவியில் இருந்து விலக்கப்பட்ட பின்னர் அல் ஜசீரா பொய்யான தகவல்களை வழங்குவதாகக்ச் சொல்லி அல் ஜசீராவில் இருந்து வெளியேறியுள்ளனர். 

சவுதியின் அல் அரபியா ஊடகம் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு பாலியல் போராளிகளை எகிப்தில் களமிறக்க இருப்பதாகத் தெரிவித்துள்ளது. தொடர்ந்து எகிப்தில் இரவு பகலாக ஆர்ப்பாட்டம் செய்துவரும் இசுலாமிய சகோதரத்துவ அமைப்பு ஆதரவாளர்களை ஊக்கப்படுத்த அவர்களைப் பாலியல் ரீதியாக மகிழ்ச்சிப் படுத்த பெண்கள் களமிறக்கப்படவிருக்கிறார்கள் என்கிறது அல் அரபியா

 மேர்சி பதவியில் இருந்து விலக்கப்பட்டவுடன் சவுதி அரேபியாவும் குவைத்தும் யுனைட்டெட் அரப் எமிரேட்டும் எகிப்திற்கு பத்து பில்லியன் அமெரிக்க டாலர்களை உதவியாக வழங்க முன்வந்தன. இந்த நகர்வுகளை அமெரிக்காவின் கைகளை மீறி மத்திய கிழக்கில் நிகழ்வுகள் நடந்தேறுகின்றன என்று சில விமர்சகர்கள் கூறுகின்றனர். ஆனால் இவையாவும் அமெரிக்காவின் இயக்கத்தில் நடந்து கொண்டிருக்கின்றன. மேர்சியின் பதவி விலகக்கலில் அமெரிக்கா நடு நிலைமை வகிப்பதாகக் காட்டிக் கொண்டாலும் அது திரைக்குப் பின்னால் பல பேச்சு வார்த்தைகளை நடாத்திக் கொண்டு இருக்கின்றது. அமெரிக்கா நேரடியாக தலையிடுவது போல் காட்டிக் கொண்டால் அது பல இசுலாமியத் தீவிரவாதிகளை ஆத்திரப்படுத்தும். மத சார்ப்பற்ற தாராண்மை வாதிகளை பலவீனப் படுத்தும்.

கட்டாரும் அல் ஜசீராவும் மத்திய கிழக்கில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வல்லன. இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு அல் ஜசீரா கொடுக்கும் ஆதரவு  பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வல்லது. மத்திய கிழக்கில் கட்டார் நாட்டினதும் அல் ஜசீராவினதும் தாக்கத்தை சவுதி அரேபியா விரும்பவில்லை எனத் தெரிகிறது. சவுதி அரேபிய மன்னர் குடும்பமும் கட்டார் மன்னர் குடும்பமும் சுனி முஸ்லிம்களாக இருந்த போதும் சவுதி மன்னர் குடும்பம் தம்மை உயர்ந்த தர குடும்பத்தினராகவும், கட்டார் மன்னர் குடும்பத்தினரை தாழ்ந்த தர குடும்பதினராகவும் கருதுகின்றனர்.  இந்த இரு மன்னர் குடும்பங்களுக்கு இடையிலான போட்டி அரபு மக்களை உருப்பட விடாது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...