Sunday 23 February 2014

காணாமல் போன அதிபரும் கதறிய உக்ரேயின் சிதறுமா என்ற கேள்வியும்.

2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21-ம் திகதி உக்ரேயினின் அதிபர் விக்டர் யனுகோவிச் ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்யவிருந்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆரம்பமான உக்ரேயின் அதிபருக்கு எதிரான ஆர்ப்பாட்டம் 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 23-ம் திகதி திடீரென பெரும் திருப்பத்துக்கு உள்ளாகியுள்ளது.

உக்ரேயின் பாராளமன்றத்தின் அதிரடி நடவடிக்கைக்கள்
உக்ரேயினைத் தன்பக்கம் இழுக்கப் பெரு முயற்ச்சி செய்து கொண்டிருந்த இரசியா குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் கடைசி நாள் கொண்டாட்டத்தில் ஆழ்ந்திருக்கும் வேளையில் உக்ரேயின் பாராளமன்றம் தீவிரமாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவற்றில் மிக முக்கியமானது உக்ரேயினின் அதிபர் விக்டர் யனுகோவிச்சை ஒரு மனதான தீர்மானத்தின் மூலம் பதிவியில் இருந்து விலக்கியமையாகும். அத்துடன் பாராளமன்றம் அதன் அவைத்தலைவர் ஒலெக்ஸாண்டர் தேர்கினோவை (Oleksandr V. Turchynov) தற்காலிக அதிபராக்கியது. இதற்கு முன்னரே நிலைமை தனக்கு எதிராகத் திரும்புகிறது என உணர்ந்த விக்டர் யனுகோவிச் தனது மாளிகையில் இருந்து உழங்கு வானூர்தி மூலம் வெளியேறித் தலைமறைவானார். உக்ரேயினில் நிகழந்த மற்ற அதிரடி மாற்றங்கள்:

  • சிறையில் இருந்த முன்னாள் தலைமை அமைச்சர் ஜூலியா தமொஷென்கோவை ( Yulia V. Tymoshenko) விடுவித்தது.
  • பதவியில் இருந்து விரட்டப்பட்ட விக்டன் யனுக்கோவைச்சை கைது செய்யப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
  • விக்டர் யனுகோவிச்சிற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்து விட்ட உற்துறை அமைச்சரைப் பதவியில் இருந்து நீக்கியது. 
  • உக்ரேனியப் படைத்துறை தாம் அரசியல் மாற்றங்களில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்தது.
  • வெளியுறவுத் துறை அமைச்சரைப் பதவியில் இருந்து நீக்கியது.
  • இரசியாவின் முகத்தில் கரிபூச சிறுபான்மை இனங்களின் மொழி உரிமைச் சட்டத்தை இரத்துச் செய்தது. 
  • சுகாதாரத் துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 
  • ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உடன்படிக்கை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
  • கல்வித்துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டார். 
  • மே மாதம் அதிபர் தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. 
இரகசியச் சதி
உக்ரேயினில் ஆட்சி மாற்றத்திற்கு திரைமறைவில் ஜேர்மனி, பிரான்ஸ், ஐக்கிய அமெரிக்கா, போலாந்து ஆகிய நாடுகள் செயற்பட்டன. விக்டர் யனுகோவிச் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் இடைக்கால அதிபராகப் பதவியேற்ற ஒலெக்ஸாண்டர் தேர்கினோவை ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுத் துறைத் தலைமை அதிகாரி கதரின் அஸ்டன் உடனடியாகச் சந்தித்தார். வங்குரோத்து நிலையை அடைந்துள்ள உக்ரேயின்ற்கு பன்னாட்டு நாணய நிதியத்தூடாக உதவி வழங்கப்படும் என மேற்கு நாடுகள் தெரிவித்தன. பன்னாட்டு நாணய நிதியம் அரச உடமையான நிறுவனங்களை தனியார் மயமாக்கும் படி உக்ரேயினின் அரசை நிர்ப்பந்திக்கும். அரச நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் போது மேற்கு நாடுகள் அவற்றில் முதலீடு செய்து இலாபமீட்டும்.

அடிவயிற்றில் அடிவாங்கிய இரசியா தனது படையை அனுப்புமா?
உக்ரேயினில் நடந்து கொண்டிருக்கும் அதிரடி மாற்றங்கள் உக்ரேயினை இரசியாவின் பிடியில் இருந்து விடுவித்து அதை மேற்கு ஐரோப்பிய நாடுகளுடனும் ஐக்கிய அமெரிக்காவுடனும் இணைப்பதற்கு வழி செய்வதாக அமைகின்றது.  மேற்கு ஐரோப்பிய நாடுகளும் ஐக்கிய அமெரிக்காவும் பின்னணியில் இருந்து செய்த திரைமறைவு நடவடிக்கைகள்தான் விக்டர் யனுகோவிச்சைப் பதவியில் இருந்து விரட்டியது என்பதில் ஐயமில்லை. இரசியாவின் பாதுகாப்பிற்கு கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உக்ரேயின் நேட்டோப் படைக் கூட்டமைப்பில் இணைந்தால் அது இரசியாவின் உலக அரங்கில் மீண்டும் செய்ய விரும்பும் ஆதிக்கத்திற்கு பேரடியாகும். உக்ரேயின் என்பதன் பொருள் எல்லை நாடு என்பதாகும். இரசியாவின் எல்லையில் மேற்கு நாடுகளின் ஆதிக்கம் என்பது. இரசியா விரும்பக்கூடிய ஒன்றல்ல. இரசியக் கடற்படையின் கருங்கடல் பிரிவின் தலைமையகம் உக்ரேயினின் செவெரோப்போல் நகரில் இருக்கிறது. உக்ரேயின் இரசியாவின் பாதுகாப்பைப் பொறுத்தவரை அதன் மென்மையான அடிவயிறு என்கிறார்கள் படைத்துறை நிபுணர்கள். இரசியா மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கான எரிவாயு ஏற்றுமதியை உக்ரேயினூடாகவே செய்கின்றது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் தேசிய பாதுகாப்புத் துறை ஆலோசகர் கொண்டலினா றைஸ் இரசியா உக்ரேயினில் படைத்துறைத் தலையீடு செய்தால் அது பெரும் ஆபத்தான தவறாக அமையும் என்றார். பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சரும் இரசியா உக்ரேயினில் தலையிடக் கூடாது எனத் தெரிவித்தார். உக்ரேயினில் நடந்த ஆட்சி மாற்றத்தை இரசியா ஒரு பயங்கரவாதிகளின் படைக்கலன் ஏந்திய சதி என இரசியா விமர்சித்துள்ளது. அத்துடன் உக்ரேயினின் கிரிமியாப் பிரதேச மக்கள் தம்மைப் பாதுகாக்கும்படி இரசியாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிரிமியாவில் இரசியப் படைத்தளம் இருக்கின்றது. 1954-ம் ஆண்டின் முன்னர் கிரிமியா இரசியாவின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் குருசேவ் அதத உக்ரேயினுடன் இணைத்தார்.

உக்ரேயின் பிளவுபட்டுச் சிதறுமா?
2014-ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 23-ம் திகதி உக்ரேயினில் நிகழ்ந்த அதிரடி மாற்றங்களை உக்ரேயினில் இரசியர்கள் பெரும்பகுதியாக் வாழும் பகுதியில் உள்ள பிரதேச அதிகார மையங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. உக்ரேயினில் கிழக்குப் பகுதி முழுவதிலும் சில தெற்குப் பகுதிகளிலும் இரசியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். இவர்கள் தாம் இனி உக்ரேயின் அரசிற்கு கீழ்படிந்து நடக்க மாட்டோம் வரி செலுத்த மாட்டோம் என அறிவித்து விட்டனர். சிலர் ஆர்ப்பாட்டங்களும் செய்யத் தொடங்கி விட்டனர். உக்ரேயின் பிளவு படக்கூடாது என அமெரிக்கப் பாதுகாப்புத் துறை ஆலோசகர் கொண்டலினா றைஸ் தெரிவித்துள்ளார். உக்ரேயில் திடத்தன்மை நிலவ அமெரிக்கா ஐரோப்பிய ஒன்றியத்துடனும் பன்னாட்டு நாணய நிதியத்துடனும் இரசியாவுடனும் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
புதிய உக்ரேயின் அரசை எதிர்க்கும் பிராந்தியம்.
இரசியாவிற்கு மும் முனை ஆபத்து
இரசியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உக்ரேயின் இரசியாவிற்கு எதிரான நேட்டோப் படைக் கூட்டமைப்பில் இணையும் அபாயம் இப்போது தோன்றியுள்ளது. அத்துடன் தனது முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளை இணைத்து யூரோ ஏசியா என்னும் ஒரு பெரிய பொருளாதாரக் கூட்டமைப்பை உருவாக்கும் கனவிற்கு பெரும் அடி விழுந்துள்ளது. உக்ரேயினைஐரோப்பிய ஒன்றியத்தில் இணையவிடாமல் தடுத்து தனது யூரோ ஏசியாக் கூட்டமைப்பில் இணைக்க இரசியா எண்ணி இருந்தது. இவை எல்லாவற்றிலும் மேலாக இரசியாவிலும் அரசியல் சீர் திருத்தம் கோரி மக்கள் இரசிய அதிபர் விளாடிமீர் புட்டீனுக்கு எதிராகக் கிளம்பலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...