Friday 8 July 2016

இரசியாவையும் அமெரிக்காவையும் அதிர வைத்த சீனாவின் Roaming Dragon செய்மதி.

விண்வெளியில் உள்ள குப்பைகளை வாரி அள்ளுவதற்கு என சீனா அனுப்பிய Roaming Dragon என்னும் செய்மதி பல ஐயங்களை எழுப்பியுள்ளது.  ஜூன் 25-ம் திகதி சீனாவின் தென் பிராந்திய நகரமான Hainanஇல் இருந்து சீன மொழியில் Aolong-1 என்றும் ஆங்கிலத்தில் Roaming Dragon-1 என்றும் அழைக்கப்படும் செய்மதி விண்வெளிக்கு Long March 7 rocket இல் இருந்து செலுத்தப்பட்டது. இதை தமிழில் சுற்றித்திரியும் யாளி-1 என அழைக்கலாம். சீனாவின் செய்மதி விஞ்ஞானியான Tang Yagang சுற்றித்திரியும் யாளி-1ஐப் போன்றும் இன்னும் பல விண்வெளியைச் சுத்தம் செய்யும் செய்மதிகள் விண்வெளிக்கு அனுப்பப்படும் என்றார். விண்வெளியில் குப்பைகளாகக் கிடக்கும் பழைய செய்மதிகளின் சிதைவுகளை வாரி அள்ளுவதே Aolong-1 இன் செயற்பாடு எனச்  சொல்லப்படுகின்றது. 

தும்புக் கட்டா துப்பாக்கியா?
சீனாவின் Aolong-1 ஒரு படைக்கலனாகவும் இருக்கலாம் என அமெரிக்காவிலும் இரசியாவிலும் கருதப்படுகின்றது. விண்வெளியில் இருக்கும் பழைய செய்மதிகள் மற்ற செய்மதிகளுக்கு ஆபத்து  விளைவிக்கக் கூடிய வகையில் சுற்றித் திரிகின்றன. 2015-ம் ஆண்டின் நடுப்பகுதியில் இரசிய மற்றும் அமெரிக்க விண்வெளிப்பயணிகள் தங்கியிருந்த விண்வெளி ஓடத்தின் மீது மோதும் அபாயம் ஏற்பட்டிருந்தது. Aolong-1 இன் இயந்திரக்கரங்கள் (robotic arm) பொருத்தப்பட்டுள்ளன. இவை விண்வெளியில் உள்ள குப்பைகளை வாரி அள்ளும் என சீனா தெரிவித்துள்ளது. ஆனால் விண்வெளியில் உள்ள பெருமளவு குப்பைகளை வாரி அள்ளிச் சுத்தப் படுத்துவது என்பது ஓர் இயலாத காரியம் என விண்வெளி நிபுணர்கள் கூறுகின்றனர். 

பிய்த்து உதறுமா?
சீனாவின் Aolong-1 செய்மதியின் நீண்ட கரங்கள் எதிரி நாட்டுச் செய்மதிகளை பிய்த்து உதறக் கூடியவையாக இருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. சீனாவின் Aolong-1 இன் விண்வெளி இயந்திரக் கரங்கள் (Space robotic arms) படைத்துறைச் செயற்பாடுகளைச் செய்யக் கூடியவை எனவே நம்பப்படுகின்றது.  1981-ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவின் நாசா தனது விண்வெளி ஓடத்தை (space shuttle) அனுப்பிய போது அதில் பொருத்தப் பட்டிருந்த கனடாவில் உருவாக்கப் பட்ட “Canadarm”—the Canadian-made “Shuttle Remote Manipulator System” என்னும் முறை படைத்துறை நோக்கம் கொண்டதே என இரசியாவில் கரிச்னையுடன் கருதப்பட்டது.  ஆனால் 2011-ம் ஆண்டு வரை விண்வெளிக்குச் சென்று வந்த அமெரிக்காவின் விண்வெளி ஓடம் எந்த ஒரு படைநடவடிக்கையையும் செய்யவில்லை. 

2007-ம் ஆண்டில் இருந்து தொடர்கின்றது 2007-ம் ஆண்டு சீனா விண்வெளியில் மிதந்து கொண்டிருந்த தனது காலநிலை தொடர்பான செய்மதியை தரையில் இருந்து ஏவப்பட்ட தனது ஏவுகணையால் அழித்து ஒரு பரிசோதனையைச் செய்தது. தனது எதிரி நாட்டுச் செய்மதிகளை அழிக்க சீனா போட்ட திட்டம் அது எனக் கருதப்படுகின்றது. அமெரிக்கப் படையினர் தமது தொடர்பாடல்களுக்கும் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டுச் செயற்பாடுகளுக்கும் இருப்பு நிலை பற்றி அறிந்து கொள்வதற்கும் தமது செய்மதிகளிலேயே பெரிதும் தங்கியுள்ளனர். அமெரிக்காவின் அச்செய்மதிகளை சீனா தனது தரையில் இருந்து செலுத்தும் ஏவுகணைகள் மூலம் அழித்தால் அது அமெரிக்கப் படைகளுக்கு பெரும் பின்னடைவாகவே இருக்கும். 2012-ம் ஆண்டு சீனா 18 செய்மதிகளை விண்வெளிக்கு அனுப்பியது. அவை காலநிலை அவதானிப்பில் இருந்து வேவு, உளவு, படை நடவடிக்கை, தொடபாடல், வழிகாட்டல் போன்ற பலதரப்பட்ட செயற்பாடுகளைச் செய்யக் கூடியவையாக இருந்தன.  பின்னர் 2013 மேமாதம் 13-ம்திகதி தனது Xichang Satellite Launch Centerஇல் இருந்து செய்மதிகளை அழிகக் கூடிய ஏவுகணையை மிக இரகசியமாகப் பரிசோதனை செய்தது.  2015-ம் ஆண்டு ஒக்டோபர் மாதத்திலும் செய்மதிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகளை சீனா பரிசோதித்தது. அந்த ஏவுகணை எந்த இடத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது என்பதும் அறியப்படவில்லை. சீனா தொடர்ந்து தனது செய்மதிகளை ஏவும் தளங்களை(space launchers ) மேம்படுத்தியும் வருகின்றது. சீனாவின் KZ-11 என்னும் தளத்தில் இருந்து செய்மதிகளை அழிக்கக் கூடிய ஏவுகணைகள் இப்போது வீசப்படலாம் என நம்பப்படுகின்றது.
இரசியாவின் பங்கு2010-ம் ஆண்டு இரசியா தனது பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு விண்வெளியும் முக்கியமானது எனத் தெரிவித்தது. 2014-ம் ஆண்டின் இறுதியில் இரசியா விண்வெளிக்கு அனுப்பிய மூன்று செய்மதிகள் படை நடவடிக்கைகளைச் செய்யக் கூடியவை எனக் கருதப்படுகின்றது. அவை வானிலை தொடர்பான செய்மதிகள் என இரசியா சொன்ன போதிலும் அவை மற்ற செய்மதிகளை அழிக்கக் கூடியவை எனவே கருதப்படுகின்றது. 
அமெரிக்கா சும்மா இருக்குமா?அமெரிக்கப் படைத்துறையின் முதுகெலும்பாக இருப்பது செய்மதிகளே. அவற்றிற்கு ஏற்படக் கூடிய ஆபத்துக்களைப் பார்த்துக் கொண்டு அமெரிக்கப் படைத்துறையால் சும்மா இருக்க முடியாது. சற்றுத் தாமதமானாலும் 2014-ம் ஆண்டு அமெரிக்கா தனது செய்மதிகளை எதிரிகளிடமிருந்து பாதுகாப்பது தொடர்பாகவும் எதிரிகளின் ஏவுகணைகளை அழிப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்தத் தொடங்கியது. தற்போது அமெரிக்கா தனது செய்மதிகளை அழிக்கக் கூடிய எதிரியின் செயற்பாடுகளை வேவுபார்க்கக் கூடிய செய்மதிகளை உருவாக்கி விண்வெளியில் மிதக்க விட்டுள்ளது. அமெரிக்காவின் லேசர் படைக்கலன்களால் தரையில் இருந்தும் வானில் இருந்தும் எதிரியின் செய்மதிகளையும் தனது செய்மதிகளை அழிக்க வரும் எதிரியின் ஏவுகணைகளையும் அழிக்க முடியும். 

Thursday 7 July 2016

ஈராக்கிற்கு சில்கொட் அறிக்கை தமிழர்களுக்கு ஜெனீவாத் தீர்மானங்கள் போலே

மேற்கு நாடுகள் எனச் சொல்லப்படும் வட அமெரிக்க மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளின் மேற்காசியா மற்றும் வட ஆபிரிக்கா தொடர்பான கொள்கைகளில் மூன்று அம்சங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 1. சீரான எரிபொருள் விநியோகம், 2. மத்திய தரைக் கடலினூடான ஒழுங்கான போக்குவரத்து, 3. இஸ்ரேலின் இருப்பு. இவை அவர்களால் பகிரங்கமாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் அவர்கள் இரகசியமாக ஒரு நோக்கத்தையும் கொண்டுள்ளனர். ஓர் இஸ்லாமிய வல்லரசு உருவாகக் கூடாது என்பதுதான் அவர்களின் இரகசிய நோக்கம்.

முதலாம் உலகப் போரில் தற்போது மேற்கு நாடுகளின் நட்பு நாடாகத் திகழும் உதுமானியப் பேரரசு தோற்கடிக்கப் பட்ட பின்னர் இனி ஓர் இஸ்லாமியப் பேரரசு உருவாகக் கூடாது என்ற நோக்கத்துடன் பிரித்தானியாவும் பிரான்ஸும் இணைந்து மேற்காசிய மற்றும் வட ஆபிரிக்க நாடுகளின் எல்லைகளை வகுத்தன. இன மோதல்களுக்கு வழிவகுக்கக் கூடிய வகையில் தேச எல்லைகள் வகுக்கப் பட்டன. கிருஸ்த்தவர்களைப் பெரும்பான்மையாக் கொண்ட லெபனான் என்ற நாடும் உருவாக்கப்பட்டது. இன்று அரபு நாடுகளில் உருவாகியுள்ள இரத்தக் களரிக்கு அந்த எல்லைகள் தான் காரணம். ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு ஈராக்கிலும் சிரியாவிலும் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றி தமது அரசை உருவாக்கியவுடன் தமது சஞ்சிகையில் முதலில் சொன்னது பிரித்தானியாவும் பிரான்ஸும் உருவாக்கிய Sykes-Picot எல்லைகளை நாம் அழித்து விட்டோம் என்பதே.

எகிப்தின் முன்னாள் அதிபர் அப்துல் கமால் நாசர் ஒரு மதவாதி அல்லர். அவர் மதவாதிகளைத் தன்னாட்டில் அடக்கி வைத்திருந்தவர். தன்னை ஒரு இஸ்லாமியராகக் காட்டிக் கொள்ளாமல் தன்னை ஒரு அரேபியராகவும் மூன்றாம் உலக நாடுகள் குழுவில் தன்னை ஒரு பெருமை மிக்க உறுப்பினராகவும் கருதியவர் அவர். சிரியாவின் ஹஃபீஸ் அல் அசாத், லிபியாவின் மும்மர் கடாஃபி, ஈராக்கின் சதாம் ஹுசேய்ன் ஆகியோர் நாசரின் வழியை ஒட்டியே நின்றனர். இவர்களின் கடாஃபியைத் தவிர மற்றவர்கள் எவரும் இஸ்லாமியத் தீவிரவாதத்தை வளர்க்கவில்லை. இவர்கள் யாவரும் சோசலிஸம் எனப்படும் சமூகவுடமைக் கொள்கையை அரபு நாட்டுக் கலாச்சாரத்திற்கு ஏற்ப மாற்றி பாத் எனப்படும் கொள்கையுடன் தமது நாடுகளை ஆண்டு வந்தனர். உலகிலேயே மிகச் சிறந்த சமூகநலத் திட்டங்கள் இவர்களது ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன. இவர்களது சமூக நலத் திட்டங்களால் நாட்டின் வளம் உச்ச இலாபம் ஈட்டக் கூடிய வகையில் பயன்படுத்தப் படவில்லை.

இஸ்லாமிய நாடுகளிடையே சிறந்த படையணிகளையும் படைக்கலன்களையும் கொண்ட நாடாக ஈராக்கை சதாம் ஹுசேய்ன் உருவாக்கினார். உயர் தரம் வரை கட்டாய இலவசக் கல்வியை நாட்டில் அறிமுகப் படுத்தினார். பல படைக்கலன்களை இரசியாவிடமிருந்தும் மேற்கு நாடுகளிடமிருந்தும் வாங்கினார்.உள்ளூரிலே பல படைக்கலன்களை உற்பத்தி செய்யத் தொடங்கினார். அவரிடம் இருந்த ஏவுகணைகள் இஸ்ரேல் வரை பாயாக் கூடியதாக இருந்தன. மற்ற வளைகுடா நாடுகளை தன்னுடன் இணைத்து ஒரு பெரும் வல்லரசை உருவாக்கும் கனவு அவருக்கு வந்தது அவரின் உயிருக்கு உலைவைத்தது. எரிபொருட்களின் விலை டொலரில் நிர்ணயிக்கப்படாமல் யூரோவில் நிர்ணயிக்கப் பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்த சதாமும் எரிபொருட்களின் விலை இத்தனை கிராம் தங்கம் என நிர்ணயிக்கப் பட வேண்டும் என்ற கருத்தை முன்வைக்க கடாஃபியும் கொல்லப்பட்டனர்.

அல் கெய்தாவுடன் சதாம் எந்தத் தொடர்பையும் வைத்திருக்கவில்லை. மேற்கத்தியப் பாணியில் உடையணியும் சதாம் குடும்பத்தினரை அல் கெய்தா உடபட எல்லா இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களும் எதிர்த்தன. நியூயோர்க் நகரத்தில் நடந்த இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கும் சதாமிற்கும் எந்தத் தொடர்புமில்லை. ஆனால் இஸ்லாமியத் தீவிரவாதத்திற்கும் அவருக்கும் தொடர்பு இருப்பதாக தொடர் பொய்ப்பரப்புரைகள் செய்யப்பட்டன. அவரே இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்கு உத்தரவிட்டதாகவும் பொய்ச் செய்திகள் வெளிவிடப்பட்டன. அவருக்கு எதிராகச் சதி செய்த அவரது குடும்பத்தவர்களை அவர் கொன்ற  பழைய கதைகள் கிளறி எடுக்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டு அவரது (character assassination) ஆளுமை அழிப்பு நேர்த்தியாகச் செய்யப்பட்டது. உலகெங்கும் வஹாப்பிஸம் என்னும் பெயரில் திவிரவாத்தைப் பரப்பிக் கொண்டிருப்பது சவுதி அரேபியா மட்டுமே. அதற்கு எதிராக சுண்டுவிரல் கூட அசைக்கப்படுவதில்லை.

ஈராக்கில் பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்கள் இருக்கின்றன என்ற கருத்து முதலில் முன்வைக்கப்பட்டது. அதைத் தேடிச்சென்ற ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு அங்கு அப்படி ஒன்றும் இல்லை எனத் தெரிவித்தது. ஆனால் ஐக்கிய அமெரிக்கா சதாம் தானது பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்களையும் அதன் உற்பத்தி நிலையங்களையும் ஒழித்து வைத்துவிட்டார் எனக் குற்றம் சாட்டியது. சதாம் என்ற பெயரே எதிர்கொள்பவர் என்னும் பொருள் கொண்டது. மீண்டும் ஐநா நிபுணர்கள் குழு வந்து தேடுதல் செய்யலாம் என்றார் சதாம். ஆனால் பேரரசுக் கனவுடன் இருக்கும் சதாம் கொல்லப்பட வேண்டியவர் என்னும் நோக்கத்துடன். அமெரிக்காவும் பிரித்தானியாவும் பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி ஆகிய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி பேரழிவு விளைவிக்கும் படைக்கலன்களைக் கண்டு பிடிப்போம் எனச் சொல்லி ஈராக்கை ஆக்கிரமித்தன.

ஈராக்கை ஆக்கிரமிக்கும் ஜேர்ஜ் புஷ்சின் கொள்கைக்கு நிபந்தனையற்ற ஆதரவை தனது அமைச்சரவை படைத்துறை போன்றவற்றைக் கலந்தாலோசிக்காமல் ரொனி பிளேயர் வழங்கினார். இவர்களது படையெடுப்பால் அமெரிக்கா என்ற ஒரு நாடு உருவாகுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மெசப்பட்டோமியா என்னும் பெயரில் சிறந்த ஆட்சி முறைமையையும் செழிப்பான பொருளாதாரத்தையும் கொண்ட நாடு சின்னா பின்னமானது. வரலாற்றுப் பெருமை மிக்க பாக்தாத் நகரம் சீரழிந்தது.  இவர்களது தாக்குதலால் குழந்தைகள் உட்பட ஐந்து இலட்சம் அப்பாவிகள் கொல்லப்பட்டனர். அங்கு இஸ்லாமியத் தீவிரவாதம் உருவானது. அது முதலில் அல் கெய்தா என்றும் பின்னர் இஸ்லாமிய அரசு என்றும் பெயர் பெற்றது. இவர்களின் படையெடுப்பின் விளைவால் ஈராக் இப்போது மூன்றாகப் பிளவு பட்டுள்ளது. சியா முஸ்லிம்களைப் பெரும் பான்மையினராகக் கொண்ட ஈராக்கில் சுனி இஸ்லாமியரான சதாம் ஹுசேய்னின் ஆட்சியில் இந்த இரு தரப்பினருக்கும் இடையிலான மோதல் நடப்பதில்லை. இன்று ஒரு தரப்பினரை மறு தரப்பினர் கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றார்கள். அமெரிக்கப் போர் விமானங்கள் இன்றும் குண்டு வீசி பல்லாயிரம் கட்டிடங்களைத் தரைமட்டமாக்கிக் கொண்டிருக்கின்றன.


ஈராக்கின் மீதான படையெடுப்பு தவறானது என்ற கருத்து உலகெங்கும் வலுப்பெற்ற நிலையில் அதை விசாரிக்க ஒரு கண்துடைப்பு விசாரணையை பிரித்தானிய அரசு ஆரம்பித்தது. சேர் ஜோன் சில்கொட் என்னும் முன்னாள் முகாமைச் சேவை அதிகாரி இதற்கு நியமிக்கப்பட்டார். ரொனி பிளேயரின் ஆட்சிக் காலத்திலேயே சில்கொட்டிற்கு சேர் பட்டம் வழங்கப்பட்டது.   விசாரணைக்கு தேவையான ஆவணங்கள் யாவும் தடையின்றி அவருக்கு வழங்கப்பட்டன. ஆனால் அவரது அறிக்கை ரொனி பிளேயாரைக் குறை கூறுவதாக மட்டுமே அமைந்தது. அவர் மீது குற்றம் சுமத்தவில்லை. பிளேயர் சட்ட விரோதமாக நடந்து கொண்டாரா என்பது பற்றிக் கருத்து வெளிவிடுவதை சில்கொட் தவிர்த்துக் கொண்டார். எல்லாவற்றிலும் மோசமாக ஈராக்கில் பிரித்தானியா இழைத்த போர்க்குற்றம் பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. அதற்கான மேலதிக விசாரணை தேவை என்ற கருத்து இப்போது முன் வைக்கப்படுகின்றது. ஈராக்கில் பேரழிவு விளைவிக்கக் கூடிய படைக்கலன்கள் இருப்பதாக ரொனி பிளேயர் பொய் சொன்னார் என்பது பரவலான குற்றச் சாட்டு. ஆனால் சில்கொட் அறிக்கை அவர் பொய் சொல்லவில்லை அவருக்கு பிழையான உளவுத் தகவல்கள் வழங்கப்பட்டிருந்தன என பிளேயரைப் பிணை எடுக்க முயல்கின்ற்து சில்கொட் அறிக்கை. வள்ளுவர் தனது ஓற்றாடல் அதிகாரத்தில் முதற்குறளிலேயே ஒற்றாடலும் நன்னூல்களும் அரசின் இரு கண்கள் போன்றன என்றார். ஆனால் பிளேயர் ஒரு கண்ணால் மட்டும் பார்த்தாரா? அல்லது உளவுத் தகவல்களை தனக்கு ஏற்ப மாற்றியமைத்தாரா?

சில்கொட் ஓராண்டில் முடிக்க வேண்டிய விசாரணையை ஆறாண்டுகள் இழுத்தடித்து 12 மில்லியன் பவுண் செலவழித்து 2.6மில்லியன் சொற்களடங்கிய அறிக்கையை தயாரித்துள்ளார். இதை வாசித்தே செத்து தொலையுங்கடா என்பது போன்ற அறிக்கை. அமெரிக்காவுடன் இணைந்து ஆக்கிரமித்திருக்காவிடில் அமெரிக்க பிரித்தானிய உறவு பாதிக்கப் பட்டிருக்குமா என்பது கேள்விக்குரியது என்று சொல்லி நழுவுகின்றது அறிக்கை. பெரியண்ணனை ஆத்திரப்படுத்தக் கூடாது என்பதில் கவனம் செலுத்தப்பட்டதா?

ரொனி பிளேயருக்குக் கிடைத்த அதே உளவுத் தகவல்களை வைத்து அப்போதைய பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரொபின் குக் போர் தொடுக்க உரிய ஆதரங்கள் இல்லை என்ற கருத்தை வெளிவிட்டார். போருக்கு எதிர்ப்புக் காட்டி தன் பதவியில் இருந்து விலகினார்.சில் கொட் அறிக்கை ரொனி தவறான முடிவெடுத்தார் என்று மட்டும் சொல்கின்றது. ஈராக்கின் மீது படையெடுக்கும் போது பிரித்தானியப் பாராளமன்றத்தில் அவரது தொழிற்கட்சி எதிர்க்கட்சியிலும் பார்க்க  167 அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்தது.

 2010-ம் ஆண்டு அமெரிக்கத் துணை அதிபர் ஜோ பிடன் 90,0000 அமெரிக்கப் படையினர் வீடு திரும்பப் போகின்றார்கள். ஈராக்கில் மக்களாட்சி மலரப் போக்கின்றது உறுதியான அரசு அமையப் போகின்றது என்றார். ஆனால் இன்று ஈராக் இரத்தத்தில் குளித்துக் கொண்டிருக்கின்றது. தற்போதைய ஈராக்கின் அழிவு நிலை பற்றி சில்கொட்டின் அறிக்கை கருத்தில் கொள்ளவே இல்லை. 169 பிரித்தானியப் படையினர் கொல்லப் பட்டமை தொடர்பாகக் கரிசனை காட்டும் சில்கொட் அறிக்கை வெளிவருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் ஒரு குண்டு வெடிப்பில் மட்டும் 250இற்கு மேற்பட்ட அப்பாவிகள் கொல்லப்பட்டனர். சதாமை ஆட்சியில் இருக்க விட்டிருந்தால் இது நடந்திருக்குமா?

தமிழீழத்தில் இருபது நாடுகளின் ஆதரவுடன் சிங்களப் பேரினவாதிகள் செய்த இனக்கொலையை ஒரு மனித உரிமைப் பிரச்சனையாக்கினர். அது போல பிரித்தானியா ஈராக்கில் இழைத்த போர்க்குற்றத்தை சரியாக ஆராயாமல் எடுத்த முடிவு எனக் குறை கூறுகின்றனர். அது மட்டும் தான் விடப்பட்ட பிழை என்பதுபோல் காட்டுகின்றனர். ஈராக்கில் செய்த அழிபாடுகளுக்கோ அல்லது கொல்லப்பட்டவர்களுக்கோ சில்கொட் அறிக்கை நீதி தேட முயலவில்லை. அதற்கான இழப்பீடு யார் கொடுப்பது? பிளேயர் தான் செய்தது சரி என்கின்றார். சிங்களப் பேரினவாதிகளும் அதையே சொல்கின்றனர். ஜெனீவாவின் அறிக்கைகள் போர்க்குற்றம் நடந்திருக்கலாம் அதற்கு மேலதிக விசாரணை தேவை எனச் சொல்லும். ஆனால் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் போது போர்க்குற்றம் என்ற வாசகமே இருக்காது. சிங்கள இனக் கொலையாளிகளுக்கு கால அவகாசம் வழங்கப்படுவதுடன் அவர்களின் இன அழிப்புத் தொடர ஏதுவான சூழலும் அமைத்துக் கொடுக்கப்படுகின்றது. அபிவிருத்தி என்ற போர்வையில் மனித உரிமை மீறல் என்ற குழிக்குள் இனக்கொலைக் குற்றம் புதைக்கப்படுகின்றது. ரொனி பிளேயர் குற்றம் இழைத்தாரா என்பதை நீதி மன்றம்தான் தீர்மானிக்க வேண்டும் என்கின்றது சில்கொட் அறிக்கை. ஜெனிவாவிலும் இந்த மாதிரியே சிலர் சொல்கின்றார்கள்.

 What does the Chilcot report say? (Courtesy Guardian)

Sir John Chilcot delivered a devastating critique of Tony Blair’s decision to go to war in Iraq in 2003, concluding that Britain chose to join the US invasion before “peaceful options for disarmament” had been exhausted. His report, which amounts to arguably the most scathing official verdict given on any modern British prime minister, concludes:

   1.  Tony Blair exaggerated the case for war in Iraq
   2. There was no imminent threat from Saddam Hussein
   3.  Britain’s intelligence agencies produced "flawed information"
   4.  George Bush largely ignored UK advice on postwar planning
   5. The UK military were ill-equipped for the task
   6.  UK-US relations would not have been harmed had the UK stayed out of the war

ரொனி பிளேயருக்குக் கிடைத்த அதே உளவுத் தகவல்களை வைத்து அப்போதைய பிரித்தானிய வெளியுறவுத் துறை அமைச்சர் ரொபின் குக் போர் தொடுக்க உரிய ஆதரங்கள் இல்லை என்ற கருத்தை வெளிவிட்டார். போருக்கு எதிர்ப்புக் காட்டி தன் பதவியில் இருந்து விலகினார்.சில் கொட் அறிக்கை ரொனி தவறான முடிவெடுத்தார் என்று மட்டும் சொல்கின்றது. ஈராக்கின் மீது படையெடுக்கும் போது பிரித்தானியப் பாராளமன்றத்தில் அவரது தொழிற்கட்சி எதிர்க்கட்சியிலும் பார்க்க  167 அதிக உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. 

ஈராக்கின் மீதான ஆக்கிரமிப்புப் போரால் பிரித்தானியப் படையினருக்கு ரொனி பிளேயர் அநீதி இழைத்தார் என்ற திசையில் இப்போது நிலைமை நகர்த்தப்படுகின்றது. ஈராக்கில் பிரித்தானியப் படைகள் செய்த அட்டூழியங்கள் மறைக்கப்படுகின்றன.  ஈழத்தில் நடந்த இனக்கொலைக்கு அமெரிக்காவும் பிரித்தானியாவும் துணை போன குற்றவாளிகள் என பிறீமன் தீர்ப்பாயம் சொன்னது ஜெனீவாவில் மறைக்கப்பட்டு ஈழத்தவர்களுக்கு நீதி தேடுபவர்களாக அமெரிக்காவும் பிரித்தானியாவும் தம்மை உலகிற்கிகுக் காட்டிக் கொண்டிருக்கின்றனர். ஈராக்கை ஆக்கிரமித்த போது உயிரிழந்த பிரித்தானியப் படையினரின் குடும்பம் இனி பிளேயருக்கு எதிராக வழக்குத் தொடுக்காது. அது அரசுக்கு எதிராக வழக்க்குத் தொடுத்து தமக்கான இழப்பீடாகப் பெரும் தொகைப்பணத்தைப் பெற்றுக் கொள்வர்.

உள்ளக விசாரணை மூலம் தீர்வு கிடைக்கும் என நம்புபவர்களுக்கு சில்கொட் அறிக்கை நல்ல பாடமாகும். 

ஒரு குற்றவாளியைத் தண்டிப்பது மீண்டும் அப்படி ஒரு குற்றம் நடக்காமல் இருப்பதற்காகும். ஆனால் ரொனி பிளேயர் தான் மீண்டும் அப்படி ஒரு ஆக்கிரமிப்பை செய்யத் தயங்க மாட்டேன் எனச் சொல்வது தேவையான நேரம் தேவையான நாட்டில் யாரும் ஆக்கிரமித்து அதைச் சின்னாபின்னப் படுத்தலாம் எனச் சொல்வது போல் இருக்கின்றது. ரொனி பிளேயர் பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டிய குற்றவாளி. அதை இப்போதைய ஈராக்கிய அரசு செய்ய மாட்டாது.  அமைதிப் படை என்னும் பெயரில் ஒரு கொலைவெறி நாய்ப்படை வந்ததை நாம் அறிவோம். சமாதானத்தை நிலை நாடுகின்றோம் பயங்கரவாதத்தை ஒழிக்கின்றோம் என்னும் போர்வையில் இனி ஒரு நாடு சின்ன பின்னப்படக் கூடாது என்பதில் உலக மக்கள் விழிப்புடன் இருந்து வல்லாதிக்க நாடுகளுக்கு எதிராகக் கிளர்ந்து எழ வேண்டும்.

Monday 4 July 2016

துருக்கியின் உலக உறவும் ஐரோப்பிய ஒன்றியமும்


ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமா என்ற விவாதத்தில் 77மில்லியன் மக்களைக் கொண்ட துருக்கி  ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தால் அங்கிருந்து பெருமளவு இஸ்லாமியர்கள் பிரித்தானியாவில் வந்து குடியேறுவார்கள் என்ற பூச்சாண்டி பரவலாக முன்வைக்கப்பட்டது.  இந்த வகையான பரப்புரைக்கு துருக்கி தனது அதிருப்தியையும் தெரிவித்திருந்தது. ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இணைவதற்கு ஆதரவு தெரிவித்த நாடான பிரித்தானியா இப்போது விலகிவிட்டபடியால் துருக்கி ஒன்றியத்தில் இணைவது என்பது கேள்விக் குறியாகிவிட்டது. 

துருக்கியா கொம்பா?
மேற்கு நாடுகள் எனச் சொல்லப்படும் மேற்கு ஐரோப்பிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் துருக்கியை அதன் புவிசார் கேந்திர முக்கியத்துவத்திற்காக கவனமாகக் கையாள்கின்றன.  துருக்கி மற்றைய இசுலாமிய நாடுகளிலிருந்து வேறுபட்டு நிற்கிறது. அது ஒரு குடியரசு நாடு தேர்தல் மூலம் தனது தலைமை அமைச்சரைத் தேர்ந்தெடுக்கின்றது. சம்பிரதாய குடியரசுத் தலைவர் கூட தேர்தல் மூலமாகத் தேர்ந்தெடுக்கப் படுகிறார்.  அதன் அரசு மதசார்பற்றது. மேற்கு நாடுகளின் படைத்துறைக் கூட்டமைப்பான நேட்டோவில் உறுப்புரிமை கொண்ட ஒரே இசுலாமிய மக்களைப் பெரும்பான்மையினர்களாகக் கொண்ட நாடு.  அமெரிக்காவுடன் நீண்டகால நட்புறவைக் கொண்ட நாடு. எண்ணிக்கை அடிப்படையில் நேட்டோவின் இரண்டாவது பெரிய படைத்துறையைக் கொண்ட நாடு துருக்கியாகும். துருக்கியின் பொருளாதாரமும் வலுவுள்ள நிலையில் உள்ளது. 

புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த துருக்கி
பூகோள ரீதியிலும் துருக்கி ஒரு முக்கியமான இடம் வகிக்கிறது. எண்ணெய் வளம் மிக்க மத்திய கிழக்கு, போல்க்கன் பிராந்தியம், வளைகுடாப் பிராந்தியம், கோக்கஸ் பிராந்தியம் ஆகியவற்றிக்கு அண்மையில் துருக்கி அமைந்துள்ளது. மேற்குலகின் கிழக்கு வாசல் துருக்கி என விபரிக்கப்படுகிறது. அத்துடன் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் ஆபிரிக்காவிற்கும் இடையில் உள்ள அனட்டோலியன் குடாப் பிராந்தியத்தில் துருக்கி இருக்கிறது. மேற்குலகிற்கும் இசுலாமிய உலகிற்கும் ஒரு பாலமாக துருக்கி செயற்படுகிறது. கருங்கடல், மத்திய தரைக்கடல், ஈகன் கடல் (Aegean Sea) ஆகியவற்றிடை துருக்கி அமைந்துள்ளது. மத்திய கிழக்கில் இருந்தும் வளைகுடாவில் இருந்தும் ஐரோப்பிய நாடுகளிற்கான எரிபொருள் விநியோகத்திற்கு துருக்கி முக்கியத்துவம் பெறுகிறது. துருக்கி ஈகன் கடலையும் கருங்கடலையும் இணைக்கும் துருக்கி நீரிணையை மூடினால் இரசியா மத்திய தரைக்கடல் பக்கம் அடியெடுத்து வைக்க முடியாது.  மத்திய தரைக்கடலின் படைத்துறைச் சமநிலையைத் தீர்மானிக்கும் நாடாக துருக்கி இருக்கின்றது. இரசியாவினதும் ஈரானினதும் பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் 2010-ம் ஆண்டு நேட்டோப் படையினரின் மிகவும் உணர்திறன் மிக்க X-band radar stationஐ துருக்கியில் நிறுவ துருக்கி ஒத்துக் கொண்டது. நேட்டோவின் Very High Readiness Joint Task Forceஇற்கு படையினரை இணைக்கவும் துருக்கி ஒத்துக் கொண்டது. 
.
ஆசியாவா ஐரோப்பாவா?
தனது நிலப்பரப்பில் 97 விழுக்காட்டை ஆசியாக் கண்டத்தில் வைத்துள்ள துருக்கி ஒரு ஐரோப்பிய நாடு அல்ல. அங்கு மக்களாட்சி நிலவினாலும் அது மேற்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போன்ற ஒரு வளர்ச்சியடைந்த மக்களாட்சி அல்ல. அங்கு ஊடக அடக்கு முறைகள், மனித உரிமை மீறல்கள், சிறுபான்மையினருக்கு எதிரான அடக்கு முறைகள் மோசமாக இருக்கின்றன. பல்கேரியா, ருமேனியா, குரோசியா, ஹங்கேரி, போலாந்து ஆகிய வளர்முக நாடுகள் ஏற்கனவே ஐரோப்பிய ஒன்றியத்தில் இருக்கின்றன. இந்த நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதால் ஒன்றியமும் சிரமப் படுகின்றது இந்த நாடுகளும் சிரமப்படுகின்றன. ஆனால் இவை சிறிய நாடுகள். 77மில்லியன் மக்களைக் கொண்ட வளர்முக நாடான துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்தால் அது பாரிய பிரச்சனைகளைக் கொண்டு வரும். 2050-ம் ஆண்டு ஜேர்மனியையும் முந்தி ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக துருக்கி அமையும். அப்போது அதன் ஆதிக்கமும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அதிகரிக்கும். இதனால் ஜேர்மனி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை ஜெர்மனி விரும்பாது. துருக்கியின் கலாச்சாரமும் வரலாறும் மத்திய ஆசியாவுடனும் வட ஆபிரிக்காவுடனும்தான் தொடர்பு பட்டிருக்கின்றது. ஐரோப்பாவைப் பொறுத்தவரை வரலாற்று அடிப்படையில் துருக்கி ஓர் அந்நிய ஆக்கிரமிப்பாளர்.

பிள்ளையார் திருமணம் போல 
.துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான விண்ணப்பத்தை 1987-ம் ஆண்டு செய்திருந்தது. தற்போது துருக்கியில் ஐரோப்பிய ஒன்றிய விவகாரத்திற்கு என ஓர் அமைச்சும் இருக்கின்றது. 1995-ம் ஆண்டு சுங்கவரி ஒன்றிய ஒப்பந்தம் ஒன்றை துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்துடன் செய்திருந்தது. 1999-ம் ஆண்டு துருக்கியை ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கான விண்ணப்பதாரி நாடாக ஒன்றியம் ஏற்றுக் கொண்டிருந்தது. பிரித்தானியாவும் பிரான்ஸும் துருக்கிக்கு அப்போது ஆதரவு தெரிவித்திருந்தன. ஆனால் சரியாகச் சொல்லப் போனால் ஆதரவு தெரிவிப்பது போல் நடைத்திருந்தன. ஐக்கிய அமெரிக்காவும் துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதற்கு ஆதரவு தெரிவித்திருந்தது. பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதா இல்லையா என்ற கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பிற்கான பரப்புரை நடந்த போது பிரித்தானியத் தலைமை அமைச்சர் டேவிட் கமரூன் துருக்கி இப்போது ஒன்றியத்தில் இணைக்கப்பட மாட்டாது என்றார். அவரது நிதியமைச்சர் 3000-ம் ஆண்டு வரை துருக்கி ஒன்றியத்தில் இணைவது சாத்தியமில்லை என்றார். துருக்கியின் மனித உரிமை மீறல்கள், ஊடகங்களுக்கு எதிரான அடக்கு முறை, பயங்கரவாத ஒழிப்புச் சட்டம், கிருத்தவர்களுக்கு எதிரான அரச் நிலைப்பாடு போன்றவை ஐரோப்பிய ஒன்றியத்தின் நியமங்களுக்கு முரணானவை என ஜேர்மனி சொல்கின்றது. இவற்றைச் சாட்டாக வைத்து துருக்கி ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவதை அது இழுத்தடிக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திற்காக துருக்கி தனது பயங்கரவாதத் தடைச்சட்டத்தை மாட்ட மாற்றது என்றார் துருக்கியின் ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்களுக்கான அமைச்சர். 

மாற்று வழி தேடும் துருக்கி
அரபு லீக், ஆசியான், பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, தென் பொதுச் சந்தை(ஆர்ஜெண்டீனா, பிரேசில், பரகுவே, உருகுவே, வெனிசுவேலா) ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு அமைப்புக்களுடன் துருக்கி தனது உறவை அண்மைக்காலங்களாக மேம்படுத்தி வருகின்றது. ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்புரிமை விண்ணப்பத்தை இழுத்தடித்து வருவதால் துருக்கி சீனா உருவாக்கிய ஷாங்காய் ஒத்துழைப்பு நிறுவனம் (Shanghai Cooperation Organization - SCO) மற்றும் பிரிக்ஸ் எனப்படும் பிரேசில், இரசியா, இந்தியா, சீனா, தென் ஆபிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பு ஆகியவற்றில் இணைய ஆர்வம் காட்டியது. வரும் காலத்தில் நேட்டோவிற்கு எதிரான ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக உருவாகும் சாத்தியமுள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு நாடுகளின் கூட்டமைப்பில் துருக்கி இணைவது நேட்டோவிற்கும் பெரும் சவாலாக அமைவதுடன். மத்திய தரைக்கடலில் அமெரிக்காவிற்கு சாதகமாக உள்ள படைத்துறைச் சமநிலையை மாற்றவும் கூடியது. துருக்கி வரும் காலத்தில் ஒரு படைத்துறைக் கூட்டமைப்பாக உருவாகக் கூடிய ஷாங்காய் ஒத்துழைப்புக் கூட்டமைப்பில் துருக்கி இணைவதை சீனா பெரிதும் ஆதரிக்கின்றது. G-20 நாடுகளின் கூட்டத்திற்கு முன்னோடியான பிரிக்ஸ் கூட்டமைப்பின் அரசத் தலைவர்களின் கூட்டம் 2015 நவம்பரில் துருக்கியில் நடைபெற்றது. இஸ்ரேலையும் துருக்கி விட்டு வைக்கவில்லை. இஸ்ரேலுடன் துருக்கி தனது அரசுறவியல் உறவைப் புதுப்பித்துள்ளது. 2010-ம் ஆண்டு துருக்கியில் இருந்து காசா விடுதலை அமைப்பும் துருக்கிய மனித உரிமை அமைப்பு ஒன்றும் இணைந்து காசாவில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற படகுத் தொடர் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் பத்து துருக்கியர்கள் கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து இஸ்ரேலுடனான அரசுறவுகளை துருக்கி துண்டித்தது. இப்போது அதற்கான இழப்பீடாக பத்து மில்லியன் டொலர்களைப் பெற்றுக் கொண்டு இஸ்ரேலுடனான உறவைத் துருக்கி புதுப்பித்துள்ளது. துருக்கியில் இருந்து காசா நிலப்பரப்பிற்கு மனிதாபிமான உதவிகளை இஸ்ரேலியத் துறைமுகத்தினூடாக எடுத்துச் செல்ல இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது. இது நடந்த ஒரு சில நாட்களுக்குள் துருக்கியின் முக்கிய நகரமான இஸ்தான்புல் விமான நிலையத்தில் குண்டுத்தாக்குதல் செய்யப்பட்டது. சிரியாவில் தாக்குதல் செய்த இரசியாவின் எஸ்.யூ-24 போர் விமானம் எல்லை மீறி துருக்கிக்குள் வந்தது எனச் சொல்லி அதை தனக்குச் சொந்தமான அமெரிக்க F-22 விமானத்தில் இருந்து ஏவுகணை வீசி சுட்டு வீழ்த்தியது. துருக்கி 2015 நவம்பரில் செய்த இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து இரசியாவிற்கும் துருக்கிக்கும் இடையிலான உறவு மோசமடைந்த நிலையில் துருக்கியால் பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பிலோ அல்லது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிலோ இணைவதற்கான கதவுகள் அடைக்கப்பட்டன எனச் சொல்லலாம். 

ஐரோப்பாவிற்கு செல்லும் வழி துருக்கி
சிரியாவிலும் ஈராக்கிலும் இருந்து புகலிடத் தஞ்சம் கோருவோர் மேற்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பெருமளவில் படையெடுத்தபோது அதைத் தடுப்பதற்கு துருக்கியின் உதவி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குத் தேவைப்பட்டது. துருக்கி அதை வாய்ப்பாகப் பயன்படுத்தி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் ஒரு உடன்படிக்கையைச் செய்து கொண்டது. அதன் படி துருக்கி இந்த அகதித் தஞ்சம் கோருபவர்களை ஐரோப்பாவிற்குச் செல்லாமல் தடுக்க வேண்டும், ஐரோப்பிய ஒன்றியம் துருக்கியின் உறுப்புரிமை விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்வதைத் துரிதப்படுத்துவதுடன் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் துருக்கியர்களுக்கு வீசா இன்றி நுழைய அனுமதிக்க வேண்டும். ஆனால் இது நடந்த சில நாட்களுக்குள் துருக்கிக்கு முகத்தில் அறைந்தது போல துருக்கி ஆர்மீனியர்களைக் கொன்றமை ஓர் இனக்கொலை என ஜேர்மனியின் பாராளமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இரசியாவிற்கு நீட்டிய நட்புக்கரம்
துருக்கிய வெளியுறவுத் துறை அமைச்சர் இரசியா துருக்கியின்  Incirlik airbaseஐ ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசுக்கு எதிரான் தாக்குதலுக்குப் பயன்படுத்தலாம் என்ற சமிக்ஞையை 2016 ஜூலை 4-ம் திகதி வெளிவிட்டார். 2015 நவம்பரில் துருக்கி இரசிய விமானத்தைச் சுட்டு வீழ்த்திய பின்னார் துருக்கிக்கு எதிராக இரசியா பொருளாதாரத் தடையை விதித்திருந்தது. அதன் பிறகு 2016 ஜுலை முதலாம் திகதி இருதரப்பும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். துருக்கியில் சுய நிர்ணய உரிமை கோரிப் போராடும் குர்திஷ் மக்களுக்கு இரசியா உதவி செய்யத் தொடங்கினால் துருக்கி பெரும் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். சிரியாவிலும் ஈராக்கிலும் தமக்கு என நிலப்பரப்புக்களை வைத்திருக்கும் குர்திஷ் போராளிகள் துருக்கியில் செயற்படும் குர்திஷ் போராளிகளுக்கு பயிற்ச்சியும் படைக்கலன்களும் வழங்கக் கூடிய நிலையில் தற்போது இருக்கின்றார்கள். இதனால் இரசியாவுடன் ஒரு வலுவற்ற நிலையிலே துருக்கி பேச்சு வார்த்தை நடத்துகின்றது. 

தொடர்ந்து ஏமாற்றப்படும் துருக்கி
முதலாம் உலகப் போரின் பின்னர் துருக்கி தான் அரபு நாடுகளுடனோ அல்லது ஈரானுடனோ மத அடிப்படையில் இணைய விரும்பவில்லை என்றும் கலாச்சார அடிப்படையில் மேற்கு நாடுகளுடன் இணைந்து நடப்பதாகவும் மேற்கு நாடுகளுக்கு உறுதி மொழி வழங்கியிருந்தது. அதை முழுமையாக மேற்கு நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. சோவியத்தின் விரிவாகத்தில் இருந்து துருக்கியைப் பாதுகாக்க அதை நேட்டோவில் ஒரு உறுப்பு நாடாக இணைந்து கொள்ள அனுமதிக்கப் பட்டது. இதுவரை காலமும் துருக்கிக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்புரிமை வழங்குவது என்ற கரட்டைக் காட்டி மேற்கு நாடுகள் ஏமாற்றிக் கொண்டிருந்தன. ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னோடியான ஐரோப்பிய வர்த்தக சமூகம் ஆரம்பித்ததில் இருந்தே துருக்கி அதில் இணைய அக்கறை காட்டி வந்தது. ஆனால் இதுவரை ஒரு முழுமையான உறுப்புரிமை அதற்கு வழங்கப்படவில்லை. வழங்கும் நிகழ்தகவு மிகவும் குறைவாகவே உள்ளத்து. இப்படிப்பட்ட பின்னணியில் இரசிய விமானத்தைச் சுட்டு வீழ்த்திய பின்னர் துருக்கிக்கான வெளியுறவுத் தெரிவு ஐக்கிய அமெரிக்கா மட்டுமே.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...