Thursday 23 March 2017

இலண்டன்: தாக்குதல் சிறிது தாற்பரியம் பெரிது

இலண்டன் தாக்குதல்களுக்கு ஐ எஸ் எனப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பு உரிமை கோரியுள்ளது. பிரான்ஸ், பெல்ஜியம், ஜேர்மனி ஆகிய ஐரோப்பிய நாடுகளில் தீவிரவாதிகள் தாக்குதல் செய்த போது அந்த நாடுகளின் உளவுத் துறைகள் மீது பிரித்தானிய ஊடகங்கள் குற்றம் சுமத்தின.  அதே போல் இலண்டன் தாக்குதலுக்கும் பிரித்தானிய உளவுத் துறை மீது குற்றம் சாட்ட முடியுமா? உலகிலேயே திறமையாகவும் பயங்கரமாகவும் செயற்படும் 17 உளவு அமைப்புக்களைக் கொண்ட அமெரிக்காவில் 2016-ம் ஆண்டு இருபது தாக்குதல்கள் நடந்தன. அண்மைக்காலங்களாக நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்கள் Low-Tech ஆக இருக்கின்றன. எந்தவித தொழில்நுட்பமும் இன்றி நடக்கும் தாக்குதல்களாக இருக்கின்றன.

இலண்டன் தாக்குதல் பெல்ஜியத் தலைநகர் பிரசல்ஸ் விமான நிலையத் தாக்குதல் நடந்து ஓராண்டுப் நிறைவின் போது நடந்துள்ளது. இலண்டன் தாக்குதலுக்கு மறுநாள் பெல்ஜிய நகரான Antwerpஇல் பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவகையில் சிவப்பு விளக்கில் நிற்காமற் சென்ற வண்டி ஒன்றை காவற்துறையினர் துரத்தி இடை மறித்த போது அதில் குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதை ஓட்டிச் சென்ற வட ஆபிரிக்காவைச் சேர்ந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனிமனித (Lone-wolf)தாக்குதல்.

வேறு யாருடனும் தொடர்பு இல்லாமலும் யாருடைய உதவி இல்லாமலும் இலண்டன் தக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.பல நாடுகளில் அண்மைக்காலங்களில் இப்படிப் பட்ட தாக்குதல்கள் நடந்தன. எல்லா தொடர்பாடல்களும் உளவுத் துறையினரால் ஒட்டுக் கேட்கப்படுவதால். பலர் இணைந்து தாக்குதல் செய்வது குறைக்கப்பட்டுள்ளது. தனிமனித (Lone-wolf)தாக்குதலிற்கான வரைவிலக்கணம்:

  1. தனிப்பட்ட ஓரிருவர் நடத்தும் தாக்குதல்
  2. கட்டளைப்படி நடக்காத தாக்குதல்
  3. அரசியல் நோக்கத்திற்காக நடக்கும் தாக்குதல்
  4. எந்த ஓர் அமைப்புடனும் தொடர்பில்லாதவர்களின் தாக்குதல்
இந்த தனிமனிதத் தாக்குதலையிட்டு மேற்குலக நாடுகளில் அதிக கரிசனை கொள்ளப்படுகின்றது. ஐரோப்பாவில் முதன் முதலில் இஸ்லாமியர்களை வரவேற்ற நாடான இங்கிலாந்தின் தலைநகர் இலண்டனுக்கு தற்போது ஒரு இஸ்லாமியரே நகர பிதாவாக இருக்கின்றார்.


சிறு தாக்குதல்தான்.
பல தாக்குதல்களுடன் ஒப்பிடுகையில் இலண்டனில் நடந்தது சிறு சம்பவம் எனச் சொல்லலாம். 22-03-2017 பிற்பகல் 2.-40  ஒரு தாக்குதலாளி ஒரு மகிழூர்தியை ( a motor car that is classified as sport utility vehicle) வெஸ்ற்மின்ஸ்டர் பாலத்தின் மேலாக நடந்து சென்றவர்கள் மோதிக் கொண்டு சென்றார். அவரது வண்டி தெரு ஓரத்தில் மோதி மேலும் ஓட்ட முடியாத நிலை வந்தவுடன் கையில் இருந்த சமையலறைக் கத்தியுடன் பாராளமன்ற வளாகத்தினுள் Carriage Gates entrance ஊடாக ஓடினார். அவரைத் தடுக்க வந்த காவற்துறையாளரைக் குத்திய போது இன்னும் ஒரு காவற்துறையாளர் அவரைச் சுட்டுக் கொன்றார். கத்தியால் குத்தப்பட்ட காவற்துறையாளர் அமைச்சர் ஒருவரால் கொடுக்கப்பட்ட முதலுதவிச் சிகிச்சை பயனளிக்காமல் உயிரிழந்தார். தெரு ஓரம் நடந்து சென்றவர்களில் இருவர் கொல்லப்பட்டன்னர் 39 பேர் மருத்தவ மனையில் சிகிச்சை அழிக்கப் படும் வகையில் காயமடைந்தனர். பிரான்ஸில் இருந்து இலண்டனுக்கு கல்விச் சுற்றுலா வந்த மாணவர்கள் சம்பவ இடத்தில் இருந்தனர். அவர்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகினர். கொல்லப்பட்ட காவற்துறையாளரின் கையில் படைக்கலன்கள் ஏதும் இருக்கவில்லை. பொதுவாக பிரித்தானியக் காவற்துறையினர் பொது இடங்களில் பாதுகாப்புக்கு நிற்கும் போது கையில் துப்பாக்கிகள் ஏதும் வைத்திருப்பதில்லை. இதை ஒரு மரபாகப் பேணிவருகின்றனர்.

சிறப்பாகச் செயற்பட்ட அவசர சேவைகள்
சம்பவம் நடந்த இடத்திற்கு மேலதிக காவற்துறையினர் விரைந்து வந்தனர். பயங்கரவாத எதிர்ப்பு அணியினர் தேம்ஸ் நதியினூடாக படகுகளிலும் வந்தனர். அவசர மரூத்து உதவிக் குழுவினரும்  வெஸ்ற்மின்ஸ்டர் பாலத்திற்க்கு அண்மையில் இருந்த மருத்துவ மனைகளில் இருந்து மருத்துவர்கள் ஓடியே வந்து சிகிச்சை வழங்கினர்.

தாற்பரியம் பெரிது
தாக்குதலாளி தெரிவு செய்த இடம் நேரம் ஆகியவற்றைப் பார்க்கும் போது தாக்குதல் அவன் அதிக அளவிலான உயிரிழப்பைக் கருத்தில் கொள்ளவில்லை. அவன் எந்த வித பயிற்ச்சி பெற்றவனாகவும் தெரியவில்லை. ஆனால் அவர் தெரிவு செய்த இடம் எல்லோர் கவனத்தையும் ஈர்கக் கூடியதாக அமைந்துள்ளது. பாதுகாப்பிற்காக பிரித்தானியப் பாராளமன்றத்தினுள் உறுப்பினர்கள் வைத்துப் பூட்டப்பட்டனர். அவர்களை மகிழ்விக்க பாராளமன்றத்தைப் பார்க்க வந்த பாடசாலை ஒன்றின் மாணவர்கள் பாட்டுப் பாடினர். தலைமை அமைச்சர் தெரெசா மே அம்மையார் பாதுகாப்பாக அவரது பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சூழவுள்ள எல்லா அமைச்சர்களின் பணிமனைகள் உட்பட எல்லாப் பணிமனைகளிலும் பணிபுரிவோர் உள் வைத்துப் பூட்டப்பட்டனர். பல முக்கிய தெருக்கள் மூடப்பட்டன. வெஸ்ற்மின்ஸ்டர் நிலக்கீழ் தொடரூந்து நிலையம் மூடப்பட்டது. உயிரிழப்பு சிறிதாகிலும் தாக்குதலின் தாற்பரியம் பெரிதாகும். பிரித்தானியாவில் இருந்து பிரிவதற்கான விவாதம் நடத்திக் கொண்டிருந்த ஸ்கொட்லாந்தின் பாராளமன்றம் இங்கிலாந்துக்கு ஆதரவு தெரிவிக்குமுகமாக மூடப்பட்டது.எந்த நேரமும் உல்லாசப் பயணிகளால் நிரம்பி வழியும் இடத்தை தாக்குதலாளி தெரிவு செய்துள்ளான் காயப்பட்டவர்களில் தென் கொரியா, பிரான்ஸ், சீனா ஆகிய நாட்டவரும் அடங்குவர்.

தற்புகட்டல் (self- indoctrinated) தாக்குதலா?
ஆரம்பத்தில் இது ஒரு தனிப்பட்டவர் தனக்குத் தானே போதனை செய்து செய்த தாக்குதாலாகக் கருதப்பட்டது. ஆனால் இஸ்லாமிய அமைப்பு தனது படையணியைச் சேர்ந்த ஒருவர் இத்தாக்குதலைச் செய்ததாக உரிமை கோரியுள்ளது. அதன் உண்மைத் தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. உண்மையானால் இஸ்லாமிய அரசு தனது தாக்குதல் திறனில் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது எனச் சொல்லலாம். இரட்டைக் கோபுரத் தாக்குதலுடன் ஒப்பிடுகையில் இலண்டன் தாக்குதல் மலைக்கும் மடுவுக்கும் இடையில் உள்ள வித்தியாசம். ஐ எஸ் அமைப்பு வெளியிட்டதாகக் கருதப்படும் அறிக்கையில்:
  • "The person who implemented the attack yesterday in front of the British parliament in London was a soldier of the Islamic State and he executed the operation in response to the calls to target the sponsors of the international coalition."

பிரித்தானிய உளவுச் செயற்பாடு
மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் பிரித்தானிய அதிக நிதியை உளவுத் துறைக்கு ஒதுக்கியுள்ளது. அவர்களிடம் உலகிலேயே சிறந்த கருவிகள் உள்ளன. இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் மற்ற ஐரோப்பிய நாடுகளை விட அதிக அளவில் பிரித்தானிய கடந்த பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது. இரகசிய அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளன. தாக்குதலாளி தொடர்பான விபரம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. அவர் பிரித்தானியாவில் பிறந்தவர் எனப்படுகின்றது. ஒரு சில மணித்தியாலங்களுக்குள் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை உளவுத் துறையின் சிறப்பான செயற்பாடுதான்.. ஆனால் தாக்குதலாளியை இனம் கண்டு அவரின் பெயரை அபு இஜாதீன் எனக் காவற்துறையினர் வெளிவிட்டனர். ஆனால் அவர்கள் அடையாளம் காட்டிய நபர் இப்போதும் பிரித்தானியச் சிறையில் இருக்கின்றார். பிரித்தானியாவில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடக்கவில்லை. 2005 ஜூலை மாதம் நடந்த தக்குதலில் 4 தாக்குதலாளிகளும் 52 பொதுமக்களும் கொல்லப்பட்டனர். அதன் பின்னர் பிரித்தானிய உளவுத் துறை தீவிரவாத ஆதரவாளர்களிடையே தமது உளவாளிகளை ஊடுருவச் செய்தனர். அதன்மூலம் பல கைதுகள் செய்யப்பட்டன. அது பல தாக்குதல்களை முறியடித்தது. தாக்குதல் நடந்த மறுநாள் பாராளமன்றத்தில் உரையாற்றிய தெரெசா மே அம்மையார் தாக்குதலாளி உளவுத் துறையான MI-5இற்கு தெரிந்தவர் என்றும் தீவீரவாத ஆதரவாளராக இனம் காணப்பட்டவர் என்றும் தெரிவித்தார்.

ரிஷி மூலம் நதி மூலம் பார்க்க மாட்டார்கள்
தீவிரவாத தாக்குதல்களுக்கு அல் கெய்தா, தலிபான், இஸ்லாமிய அரசு (ஐ. எஸ்) ஆகிய அமைப்புகள் மீது குற்றம் சாட்டிவிட்டு இருந்து விடுவார்கள்.  இஸ்லாமிய தீவிரவாதத்தின் மூலம் இரண்டு இடங்களில் இருக்கின்றது ஒன்று சவுதி அரேபியா முன்னெடுக்கும் சலாபிசம். மற்றது இஸ்ரேல் அரேபியர்களுக்கு எதிராகச் செய்யும் இனவழிப்பு. இரண்டும் மேற்கு நாடுகளின் நட்பு நாடுகள்.  பிரித்தானியாவின் எக்கொனமிஸ்ற் சஞ்சிகையில் பின்னூட்டத்தில் ஒரு இஸ்லாமியர் இப்படிக் குறிப்பிடுகின்றார்:
  • Please try to remember that this scum is a salafist scum. Not Muslims. Salafism is an aberration of Islam. A parasite ideology. Parasiting on Islam
இன்னொருவர் தனது பின்னூட்டத்தில் அல்லாமீது நம்பிக்கை அற்றவர்களைக் கொல்லும்படி முகம்மது நபி குரானில் சொன்னதைக் குறிப்பிட்டுள்ளார்:
  •  Quran (9:5):"Slay the unbelievers wherever you find them, and take them captive, and besiege them and prepare for them each ambush".
மேற்கு நாடுகளின் இன்னொரு நட்பு நாடான துருக்கியின் அதிபர் ஐரோப்பியர் தங்கள் தெருக்களில் நிம்மதியாக நடமாட முடியாது என இலண்டன் தாக்குதலுக்கு ஒரு சில நாட்களின் முன்னர் தெரிவித்திருந்தார்.

பிந்தி வந்த செய்திகளின் படி:
தாக்குதலாளியின் பெயர் காலிட் மசூட். இவர் பிரித்தானியாவின் Kent  இல்  பிறந்தவர். இவரது இயற்பெயர் Adrian Russell ஆகும். ஐரோப்பியரான இவர் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டவராவார். மூன்று பிள்ளைகளின் தந்தையான இரருக்கு வயது 52. இவர் தனது தாக்குதலுக்கு ஒரு மகிழூர்தையை வாடகைக்குப் பெற்றிருந்தார்.  இவரது தாக்குதல் தொடர்பான எந்தத் தகவலும் உளவுத்துறைக்குக் கிடைத்திருக்கவில்லை. ஏற்கனவே பிரித்தானியாவில் இவர் குற்றச் செயல்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.

சிறையில் போதிக்கப்பட்டாரா?
தாக்குதலாளி கைத்தி வைதிருந்தமை, போதைப் பொருட்கள் வைத்திருந்த குற்றங்களுக்காக சிறையில் அடைக்கப்பட்டவர். பிரித்தானியச் சிறைக்கு பல்வேறுபட்ட மத போதகர்கள் சென்று போதலை செய்வதுண்டு.  சிறையில் இருக்கும் போது தாக்குதலாளி இஸ்லாமிய மத போதகரால் மனமாற்றம் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் செய்திகள் வெளிவந்தன. சிறையில் இருந்து வெளிவந்தவுடன் அவர் தனது பெயரை மாற்றி இஸ்லாமிய மதத்தைத் தழுவிக்கொண்டாராம்.

அவ்வப்போது இந்தப் பதிவு புதுப்பிக்கப்படும்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...