Friday 29 December 2017

தலை மோடியின் அலை ஓயப்போவதில்லையா?

182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தல் இரு கட்டங்களாக 2017 டிசம்பர் 9-ம் திகதியும் 14-ம் திகதியும் நடந்தன. இமாச்சல் பிரதேச மாநில சட்டசபைக்கான 68 உறுப்பினர்களையும் தேர்தெடுக்கும் தேர்தல் 2017 நவம்பர் 9-ம் திகதி நடந்தது. இந்தியத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி பிறந்த மாநிலமான குஜாரத்தில் கடந்த நான்கு தேர்தலில் அவரது பாரதிய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றிருந்தது. கடந்த இரண்டு தேர்தல்களில் இமாச்சல் பிரதேசத்தில் காங்கிரசுக் கட்சி ஆட்சியைக் கைப்பற்றி இருந்தது. தமிழ்நாடு ஆர் கே நகரில் நடந்த இடைத் தேர்தலில் பாஜக படு தோல்வியிலும் மோசமான தோல்வையைச் சந்தித்தது.

75 வயது இளையோர்
சீனா ஆக்கிரமித்து தன்னுடன் இணைத்து வைத்திருக்கும் தீபெத்தில் இருந்து இந்தியாவிற்கு சென்று வாழ்பவாழும் பெற்றோர்களுக்கு 1950இற்குப் பின்னர் இந்தியாவில் பிறந்தவர்கள் இந்தியாவில் தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமை உடையவர்கள். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மஹாராஷ்ட்டிரா, ஹரியானா ஆகிய மாநில சட்டசபைத் தேர்தல்களின் போது முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் பாரதிய ஜனதாக் கட்சி தேர்தலை எதிர் கொண்டது. ஆனால் இமாச்சல் பிரதேசத் தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் பிரேம் குமார் தமுலை அது முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது முதல் ஆச்சரியம். இரண்டாவது ஆச்சரியம் பாரதிய ஜனதாக் கட்சியில் 75-வதுக்கு மேற்பட்டோர்கள் முதலமைச்சர் பதவியில் இருக்க முடியாது என்ற விதி இருந்தும் இன்னும் இரண்டு ஆண்டுகளில் 75 வயதை அடையவிருக்கும் பிரேம்குமா தமுலை அது முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்தது இரண்டாவது ஆச்சரியம். காங்கிரசுக் கட்சி 83 வயதான வீர்பத்திர சிங்கை முதலமைச்சர் வேட்பாளராகவும் அவரது மகனை சாதரண வேட்பாளராகவும் களமிறக்கியது. இந்தக் களமிறக்கல்கள் அவரவர் சாதிகளைக் கருத்தில் கொண்டே மேற்கொள்ளப்பட்டது காந்தி பிறந்த மண்ணிற்கு களங்கம் ஏற்படுத்துவதாகும்.

சாதியும் மதவாதமும் நிறைந்த மாநிலம்
இந்தியத் தேர்தலைப் பற்றி அலசும் போது சாதியை முக்கிய காரணியாகக் கொள்ள வேண்டும். அதில் குஜராத் முன்னணி மாநிலம் எனச் சொல்லலாம். குஜராத மத நம்பிக்கை மிகுந்த இந்துக்களைக் கொண்ட மாநிலம். கோவில்களும் இந்து போதகர்களும் நிறைந்த நிலம். ஜவகர்லால் நேருவும் இந்திரா காந்தியும் தம்மை மதசார்பற்றவர்களாகக் காட்டியே அரசியலில் கொலுசோச்சினர். குஜராத் தேர்தலில் காங்கிரசுக் கட்சியினரும் ராகுல் காந்தியும் தம்மை மிதவாத இந்துத்துவாக்களாகக் காட்ட முயன்றனர். ராகுல் காந்தி குஜராத் தேர்தல் பரப்புரையின் போது பல இந்துக் கோவில்களுக்குச் சென்று தரிசனம் செய்தார். தன்னை ஒரு பிராமணர் எனச் சொல்லும் ராகுல் மூன்று வேளையும் சந்தியா வந்தனம் செய்வாரா என்பது யாருக்கும் தெரியாது.

முழுப் பரிவாரங்களுடன் களமிறங்கிய மோடி
மோடியும் அவரது 41 துணையாட்களும் குஜராத்திலும் இமாச்சல் பிரதேசத்திலும் பெரும் பரப்புரைகள் செய்தனர். குஜராத்தில் மோடி 34 கூட்டங்களில் உரையாற்றினார். ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் போலிப் பரப்புரை செய்வதில் மோடி குழுவினர் பின்னிற்பதில்லை. மோடியின் தேர்தல் தளபதியான அமித் ஷா தேர்தலில் வெற்றி பெரும் கலையை தனதாக்கிக் கொண்டவர். காங்கிரசுக் கட்சி முஸ்லிம்களுக்கு ஆதரவானதும் இந்துக்களுக்கு எதிரானதுமான கட்சி என்ற பரப்புரை வெற்றீகரமாகச் செய்யப்பட்டது. உருது மொழி இரண்டாம் அரச மொழியாகக் கொண்ட குஜராத் மாநில சட்ட சபைக்கான தேர்தல் பரப்புரையின் போது பாக்கிஸ்த்தானுடன் காங்கிரசுக் கட்சி இணைந்து செயற்படுவதாக நரேந்திர மோடி தேர்தல் பரப்புரையின் போது குற்றம் சுமத்தியிருந்தார். அது பொய்யானது என்றது காங்கிரசுக் கட்சி. காங்கிரசின் கோட்டையாகக் கருதப்படும் சிறுபான்மை இனக்குழுமங்கள் வாழும் பிரதேசங்களில் அரசு பல அபிவிருத்தித் திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அமித் ஷா தேர்தல் வெற்றியை மனதில் கொண்டு அவர் இத் திட்டங்களை செயற்படுத்தினார்.
இந்துத்துவா இலத்திரனியல்
இலத்திரனியல் வாக்குப் பதிவு குளறுபடி மிக்கது என்ற கருத்து இந்தியாவில் பரவலாக முன்வைக்கப்படுகின்றது. ஒருவர் தன்னிடம் அதற்கான காணொலி ஆதாரம் இருக்கின்றதென்றார். சில வாக்குச் சாவடிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை வாக்காளர் தொகையிலும் பார்க்க அதிகமானது என்ற கருத்தும் முன்வைக்கைப்பட்டு வருகின்றது. நடுவண் அரசும் மாநில அரசும் பாஜகவின் கையில் இருக்கும் போது அவர்களால் வளம் மிக்க தேர்தல் நடவடிக்கைகளைச் செய்ய முடிந்தது. தகவற் தொழில்நுட்பத் துறையில் முன்னணி நிற்கும் இந்தியாவில் சிறந்த இலத்திரனியல் வாக்குப் பதிவு முறைமை உருவாக்கவும் முடியும். அதே வேளை அதில் குளறு படிகள் செய்யவும் முடியும். பட்டிடார் வகுப்பைச் சேர்ந்தவர்கள் 2015இல் மோடிக்கு எதிராக உள்ளூராட்சித் தேர்தலில் செயற்பட்டார்கள். அவர்கள் இப்போது மோடியின் பக்கம். பட்டிடர்களை பிற்படுத்தப் பட்டோர் வகுப்புப் பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துப் போராட்டம் நடத்திய ஹர்திக் பட்டேல் என்ற இளையவருக்கு எதிராக பல் பாலியல் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு மக்கள் மத்தியில் அவரது பிம்பம் சிதைக்கப்பட்டது. சௌராஸ்டிரர்களில் பெரும் பகுதியினர் காங்கிரசை ஆதரித்தனர். கற்றவர்களும் நகர்ப்புறத்தினரும் பாஜகவிற்கு அதிக ஆதரவு வழங்க கிராமப் புறத்தினரும் பாமரர்களும் காங்கிரசுக் கட்சிக்கு அதிக ஆதரவு வழங்கினர். பெண்கள் மத்தியில் பாஜகவிற்கும் இளையோர் மத்தியில் காங்கிரசிற்கும் ஆதரவு அதிகரித்துள்ளது.

மாநிலம் எல்லாமும் மோடி அலையே
2014-ம் ஆண்டு காங்கிரசுக் கட்சி இந்தியாவின் 13 மாநிலங்களிலும் பாரதிய ஜனதா கட்சி 7 மாநிலங்களிலும் ஆட்சியில் இருந்தது. 2017-ம் ஆண்டு காங்கிரசுக் கட்சி 5 மாநிலங்களிலும் பாஜக 19 மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கின்றது. இந்த வெற்றிகளுக்குக் காரணம் மோடி அலை என பாஜகவினர் மார்தட்ட முடியும். ராகுல் காந்தி பெருமளவில் பரப்புரை செய்த பல தேர்தல்களில் காங்கிரசுக் கட்சி படுதோல்வியடைந்துள்ளது. குஜாராத் தேர்தலில் 2002-ம் ஆண்டு 127 தொகுதிகளிலும், 2007-ம் ஆண்டு 117 தொகுதிகளிலும், 2012-ம் ஆண்டு 115 தொகுதிகளிலும் வெற்றி பெற்ற பாஜக 2017-ம் ஆண்டு 99 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றமை அங்கு அதன் செல்வாக்கு இறங்கு முகமாகச் செல்வதைச் சுட்டிக்காட்டுகின்றது. மாறாக 80 என ஏறுமுகமாகச் செல்வதையும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. 2012-ம் ஆண்டு காங்கிரசுக் கட்சி 2002-ம் ஆண்டு 51, 2007-ம் ஆண்டு 59, 2012-ம் ஆண்டு 61 2017-ம் ஆண்டு 80 என அதனது வெற்று பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு போகின்றது. ஆனால் பாஜகவைப் பொறுத்தவரை 2012 தேர்தலில் 48 விழுக்காடு வாக்குகளையும் 2017-ம் ஆண்டு 49.1 விழுக்காடு வாக்குகளைப் பெற்றது. காங்கிரசு 2012இல் 39விழுக்காடும் 2017இல் 41.4 விழுக்காடும் என தனது வாக்கு வங்கியை இரு கட்சிகளும் அதிகரித்துள்ளன. இதனால் இரு தரப்பினரும் தமக்குப் பின்னடைவு இல்லை என வாதிடுகின்றனர்.

ஆட்சியில் இருப்பவர்களுக்கான எதிர்ப்புணர்வு
குஜராத்தில் காங்கிரசுக் கட்சி ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிரான எதிர்ப்புணர்வைப் பயன்படுத்தியதிலும் பார்க்க இமாச்சல் பிரதேசத்தில் ஆட்சியில் இருக்குக்கும் காங்கிரசுக்கு எதிரான எதிர்ப்புணர்வை பாஜக திறமையாகப் பயன்படுத்தியது. இமாச்சல் பிரதேசத்தில் முதலமைச்சராக இருந்த வீர்பத்திர சிங்கிற்கு எதிராக பலத்த ஊழல் குற்றச் சாட்டு முன்வைக்கப்பட்டது. 1998 - 2003, 2007-2012 ஆகிய காலப்பகுதிகளில் பாஜக முதலமைச்சர் வேட்பாளரான பிரேம்குமா துமல் இமாச்சல் பிரதேச சட்டசபையின் முதலமைச்சராக இருந்தார். அவரது காலப்பகுதியில் நல்லாட்சி நிலவியதாகவும் வீர்பத்திர சிங் ஆட்சியில் ஊழல் மிக்க ஆட்சி நிலவியதாகவும் அவர் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்ததாகவும் பாஜக வெற்றிகரமாகப் பரப்புரை செய்தது. காங்கிரசு ஆட்சியில் இமாச்சல் பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர் குலைந்திருந்ததாகவும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்திருந்ததாகவும் பாஜக செய்த பரப்புரைகள் பெண் வாக்காளர்களை அவர்கள் பக்கம் ஈர்த்தது. மற்ற மாநிலங்களில் நடப்பது போல இமாச்சல் பிரதேசத்திலும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமது எதிர்ப்பை ஆட்சியில் இருந்த காங்கிரசுக்கு எதிராகக் காட்டினர். 2017 ஒக்டோபரில் இமாச்சல் பிரதேசத்திற்கு சென்ற நரேந்திர மோடி அங்கு பல அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைத்தார். அத்துடன் இமாச்சல் பிரதேசத்தில் வாழும் கங்கார, மண்டி ஆகிய இனக்குழுமங்களை தமது பக்கம் இழுப்பதில் பாஜக வெற்றி கண்டு பல தொகுதிகளைக் காங்கிரசிடமிருந்து பறித்துக் கொண்டது. காங்கிரசுக் கட்சிகளின் மாநிலப் பிரிவுகளில் உட்கட்சிப் பூசல்களுக்கு என்றும் பஞ்சமிருப்பதில்லை. அது இமாச்சல் பிரதேசத்தில் மிக மோசமாக இருந்தது. இமாச்சல் பிரதேச மக்கள் காங்கிரசையும் பாஜகவையும் மாறி மாறி தெரிவு செய்யும் பழக்கம் உள்ளவர்கள் இது பாஜகவின் முறை!
வரும் சட்ட மன்றத் தேர்தல்கள்
சதிஷ்க்கர், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், மெகாலயா, மிஸ்ரோம், நாகலாந்து, ராஜஸ்த்தான், திரிபுரா ஆகிய மாநில சட்ட சபைக்கான தேர்தல்கள் 2018-ம் ஆண்டு நடைபெறவிருக்கின்றது. அதில் காங்கிரசுக் கட்சி ஆட்சியில் உள்ள கர்நாடகா மாநிலத் தேர்தல் பெரும் எதிர்பார்ப்புக்களுடன் வரவிருக்கின்றது. தற்போது சீத்தாரமையா 123 உறுப்பினர்களுடன் முலமைச்சர்காகவும் பி எஸ் எடியூரப்பா 44 உறுப்பினர்களுடன் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருக்கின்றார். காங்கிரசுக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் ஹிமந்த பிஸ்வா சர்மா தான் ராகுல் காந்தியைச் சந்திக்கச் சென்றிருந்த வேளை அவர் தம்மீது கவனம் செலுத்தாமல் தனது செல்லப் பிராணியான நாயுடன் விளையாடுவதில் அதிக அக்கறை காட்டினார் என்ற ஆத்திரத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து காங்கிரசுக் கட்சி வட கிழக்கு மாநிலங்களில் இல்லாமற் செய்வேன் என்ற சபதத்துடன் செயற்படுகின்றார். ராகுல் காந்தி தொடர்ந்து பல தேர்தல் தோல்விகளைச் சந்தித்துக் கொண்டிருப்பவர். அவரை காங்கிரசுக் கட்சியின் தலைவராக முடி சூட்டும் வேளையில் குஜராத் தேர்தல் நடைபெற்றது. ராகுலின் கைகளில் மோடி நாணயத்தாள்களை செல்லுபடியற்றதாக்கியதும் அவர் அறிமுகம் செய்த விற்பனை வரி முறைமையும் வலிமை மிக்க பரப்புரைப் படைகலன்களாக மின்னியது. ஆனால் சரியான் முழக்கமாக முன்னெடுக்கும் திறமை ராகுலிடம் இருந்திருக்கவில்லை, இந்தப் படைக்கலன்களுக்கு எதிராக பாஜக முழு அமைச்சரவையையும் குஜராத்திலும் இமாச்சல் பிரதேசத்திலும் களமிறக்கியது.

பிற்போக்குத்தனம் தெற்கில் செல்லாது.
மோடி அலை கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் வீசுவதற்கு வாய்ப்பே இல்லை. அவரினது பிற்போக்குத்தனம், மதவாதம், இஸ்லாமிய எதிர்ப்பு நிலைப்பாடு ஆகியவை கற்றவர்களை அதிகம் கொண்ட கேரளாவிலும் தமிழ்நாட்டிலும் எடுபடாது. கேரளாவில் பொதுவுடமைச் சிந்தனையையும் தமிழ்நாட்டில் பெரியாரின் போதனைகளையும் மனதில் கொண்ட மக்கள் பலர் வாழ்கின்றார்கள்.


மோடி அலை என்பது ஆரம்பத்தில் இருந்தே பொய்ப்பரப்புரைகள் என்னும் நுரைகள் மிக்கது. அதற்கு ராகுலின் திறமையின்மை என்ற காற்று அசைக்கின்றது. தற்போது காங்கிரசின் ஆட்சியில் இருக்கும் கர்நாடகா தேர்தலில் சிறப்பாகச் செயற்படும் ஊக்கத்தை இமாச்சல் பிரதேசத்திலும் குஜராத்திலும் பாஜகவினர் பெற்ற வெற்றி கொடுக்கவுள்ளது. தென் மாநிலங்களில் காங்கிரசுக் கட்சி ஆட்சியில் உள்ள ஒரே மாநிலமான கர்நாடகாவின் தற்போதைய முதல்வர் சீத்தாராமையா நம்பிக்கையுடன் இருக்கின்றார். ஆனால் 2018-ம் ஆண்டு நடக்கவிருக்கும் தேர்தலுக்கு முன்னோடியாக 2017 மார்ச்சில் காங்கிரசின் முக்கிய தலைவரும் முன்னாள் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சருமான எஸ் எம் கிருஷ்ணாவை பாஜக தன் பக்கம் இழுத்துக் கொண்டது காங்கிரசுக்கு பெரும் இடியாகும். இது போன்ற சதிகள்தான் மோடி அலையைத் தக்க வைத்துக் கொண்டிருக்கின்றன. 

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...